10 April 2012

"கசந்த மொழி"


ஒட்டிய வயிற்றைத் தட்டிய படி
நீ பசி நீங்க படிய பாடலின் mun
எக்காவியமும் ரசிக்கவில்லை எனக்கு !

தித்திக்கும் தமிழ்மொழி உன் பிஞ்சு
இதழ்களில் வெளிவரும் அம்மா தாயே !
பிச்சை இடு  என்ற வார்த்தையால் கசக்கிறது !

காதல் .......!


காற்று அவள் முடிக் கற்றைகளை கலைத்து விட, நான் அந்த மலர் முகத்தினை இரு கரங்களிலும் ஏந்திக் கொண்டு என் விழிகளால் அவள் விழிகளை ஆராய்கிறேன் .

கருவண்டு கண்கள் எனை காதலாய் நோக்கிட. கவிதையான சொற்களை உதிர்க்க அவள் செய்வாய் திறக்க நான் என் ஒற்றை விரல் கொண்டு தடுக்கிறேன். 

கவிதை எழுதி அதை உரையில் இட்டு நிலா வரும் வரையில் காத்திருந்தான் கதிரவன்

நிலாவும் வர துடித்துக் கொண்டு இருந்தது,

இரவு பகலாகி என் நினைவு நெருப்பாகி சுட்டெரிக்க நீ எங்கே என் வானம் முழுவதிலும் தேடுகிறேன்,  அங்கே தொலைவில் காதலன்  சூரியன் என் கருப்பு போர்வை தனை நீக்கி வான வீதியில் மேகத் தோட்டத்தில் என் பிறை நெற்றியில் ஒற்றை விரல் கொண்டு நட்சத்திர திலகமிடும் என் மணவாளன் .
அவனின் ஒற்றை உரசலை கேட்கிறேன் .  தீயை போலே எரியும் அவன் பகலை குளிராய் மாற்றிட அவனின் இரவுக் காதலி நிலா வருகிறாள்  என்று சொல்லுகிறீர்களா?

அன்னத்தை தூது விட நேரம் இல்லை. ,மடல் எழுதிட விரல்களில் சக்தி இல்லை. என் மன குமுறல்களை எல்லாம் நட்சத்திரமாய் கொட்டி வைத்தேன் என்னை காண வரும் சூரிய காதலனின் வருகைக்காக காத்திருந்து சூனியமான என் இரவு தனை  வெளிச்சமாக வா வா வா....

அதிகாலை நேரம் 5,30 மணி வானொலிக் கதிர்கள் எல்லாம் திருப்பள்ளி எழுச்சி பாடிட, மஞ்சள் நிறச் சூரியனுக்கு அப்பால் வெண்ணிற மேகத்தைப் பிளந்தபடி, புஷ்ப வாகனம். அதிலிருந்து வெற்று மார்ாப்போடும், கையில் தடியோடும், வசீகரப் புன்னகையின் துணையில் இறங்கினார் காந்தியடிகள். கூடவே ஒரு தொண்டரும்.

அண்ணலே! இத்தனை வருடங்களுக்குப் பிறகு நாம் பூமிக்கு வந்ததன் நோக்கம் என்னவோ ?

மதுரன் நான் வாழ்ந்த பூமியிது! இதைவிட்டு நான் போனாலும், என் கொள்கைகளையும், எண்ணங்களையும் இங்கு விட்டுப் போயிருக்கிறேன். அவற்றை இந்த மக்கள் எப்படிக் கடைபிடிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளவே வந்திருக்கிறேன்.

நம்மை யாரும்....?!

உணர மாட்டார்கள். வா போகலாம் இருவரும் காற்றைக் கிழித்துக் கொண்டு நடக்க,,,

பொழுது சற்றே புலர்ந்தது. நெருக்கடியான சாலை வாகனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி இட்டபடி முந்திட சற்றுத் தள்ளிக் குவிந்திருந்த கூட்டத்தினுள் நுழைந்தனர் இருவரும்.

இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ஒருவனைச் சுற்றி உச்சுக் கொட்டியபடியே சிலர், வேலையிருக்குப்பா? என்று நழுவினார்கள்.

இந்தாளைக் கொண்டுபோய், ஆஸ்பிட்டல்ல சேர்த்திட்டு போலீஸ் கேசுன்னு யாரு அலையறது?

சரிதான்யா பாவப்பட்டுச் சேர்த்திட்டா, நாய் மாதிரி வேலை வெட்டிய விட்டுட்டு நானில்லே போகணும். நீ வா.. நண்பனின் அதட்டலுக்கு பயந்து திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே ஓடிய நண்பன்.

காந்தியடிகள் இக்காட்சியைக் கண்டு மிகவும் மனம் நொந்தார். நாட்டு மக்கள் யாரிடமும் அன்பும் கருணையும் இல்லையே என்று கவலையோடு நடந்தார். கண்ணுக்கு எதிரே ஒருவன் தன் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறான். ஏதோ சாதாரண நிகழ்வினைக் காண்பதைப் போல போகிறார்களே என்று எண்ணியபடியே, ஒரு டீக்கடையின் முன் நின்றார்கள் இருவரும்.

காலைநேரம் பாய்லர் எரிந்தபடி இருக்க, ஒரே கூட்டம், நான்கு நாற்காலி நண்பர்களின் அரட்டையைக் கவனித்தார்.

ஏண்டா, அனு சிட்பண்ட் 10கோடி மோசடி பண்ணியிருக்கான் பார்த்தியா?

ஏமாறுகிறவங்க இருக்கும் வரையில் இந்த மாதிரி ஏமாத்தறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க?

உண்மைதான், அதிகமாக வட்டி, தங்கக்காசு கவர்ச்சியா ஒரு நடிகையைக் கூட்டிட்டு வந்து திறக்க வைச்சிடுங்க. உடனே கண்ணை மூடிகிட்டு பணத்தைக் கொட்ட ஆரம்பிச்சிடறாங்க.

பேண்ட் சட்டை போட்டு இங்கிலீஷ் நிஜத் திருடனுங்க இவங்க.

கரெக்ட்தாண்டா, எனக்குத் தெரிஞ்சு இந்த மூன்று வருடத்திலே எத்தனையோ பேர்! இந்த மாதிரி மோசடி நடந்துகிட்டுதான் இருக்கு, ஆனா நம்ம ஆளுங்க திருந்தவே மாட்டாங்களே!?

இதுக்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையோ? கவர்மெண்ட் என்ன செய்யறாங்க?

என்ன செய்வாங்க? எத்தனை தடவை மொட்டை அடித்தால் கூட, திரும்பவும் ஏமாறத் தயாரா இருக்காங்களே?!

எங்கு பாார்த்தாலும் ஏமாற்று வேலைதான் பிரதானம் போல அய்யா,. தொண்டர் மதுரனின் கேள்விக்குப் பதில் கூறாமல் மெளனமாய் வந்தார் மகாத்மா.

சாலைகளின் ஓரத்தில் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், பொய்யான வாக்குறுதிகளை வீசியெறிந்த அரசியல்வாதிகளைப் பற்றி மக்களின் சாடல்கள். சில இடங்களில் மேடை போட்டு எதிர்க்கட்சியை விளாசித் தள்ளும் கொச்சைப் பேச்சாளர்கள். யாரும் இங்கே ஒழுங்கு இல்லை, ஆட்சிக்காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்ப சுரண்டிவிட்டு, ஆயுள் முடிந்தவுடன் அவசரமாய்ச் செய்த தவறை மறைக்க ஆஸ்பத்திரிகளிலும், கோர்ட் வளாகத்திலும் சுற்றும் பெரிய மனிதர்கள். தன் குற்றத்தை மறைக்க மற்றவரின் மேல் குறை சொல்லிச் சேற்றைப் பூசும் இவர்களைக் கண்டாலே பெரும் வேதனையாய் இருந்தது. நம் காலத்தில் புற்றீசல் போல ஆயிரம் கட்சிகள் தோன்றி இருந்தாலும் யாரும் மக்கள் நலன் பற்றி நினையாமல் இருந்தது. மனதிற்கு வேதனை அளிக்கிறது. வருத்தத்துடன் மகாத்மா அடுத்த வீதியை அடைந்தார்.

போலீஸ் வேன் ஒன்று இரண்டு பேரைக் கைது செய்து வேனில் ஏற்றியபடி சென்றது. வேடிக்கைப் பார்த்தவர்களில் இருவர் சம்பாஷனை மகாத்மா, தொண்டரின் காதிலும் விழுந்தது. என்னத்துக் கு இவங்க இரண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க?

போனாவாரம் நடந்த குண்டு வெடிப்பிலே 150பேர் செத்தாங்களே?! டீவியிலே கூட பரபரப்பா வந்ததே...

ஆமாம்.

அதுக்கு வெடிகுண்டு சப்ளை பண்ணவங்க இவங்க இரண்டு பேரும்தான்னு போலீஸ் கண்டுபிடிச்சிட்டாங்க. அதனால்தான் அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டுப் போறாங்க?

இவனுங்களையெல்லாம் நிக்க வைச்சுச் சுடணும்.

இவங்க கோரிக்கைகள் நிறைவேற எத்தனை அப்பாவி உயிர்களைக் கொல்றாங்க? மனசாட்சியே கிடையாதா இவங்களுக்கு? அங்கலாய்த்தபடியே போயினர், இங்குள்ள நிலைமையைப் பார்த்தால் மனித உயிருக்கு மதிப்பே இல்லைபோல் தெரிகிறதே அய்யா...

ம்...! நான் மற்றும் எத்தனையோ தன்னலமற்ற அன்பர்கள் தங்கள் உயிரையும் துறந்து பெற்றுத் தந்த சுதந்திரம் இன்று.... வேதனையாக உள்ளது மதுரன். விஞ்ஞானம் வளர்ந்து இருக்கிறது. ஆனால் ஒளிபுக முடியாத அளவிற்கு அஞ்ஞானம் உள்ளதே?!

பஸ் ஸ்டாண்ட்டைக் கடக்கும் சமயம், ஜீன்ஸ் பேண்ட், லாங் டாப்ஸ், ஸ்லீவ்லெஸ் என்று ஆண்களும், பெண்களும் வித்தியாசமின்றி, தாய்மொழியை மறந்து ஆங்கிலத்திலேயே விளாசித் தள்ளிக் கொண்டு இருந்தனர்.

கடைசியாய்ச் சட்ட சபையின வாசலுக்குச் சென்றனர். அங்கு நடுநாயகமாய்ப் புன்னகையுடன் மகாத்மாவின் திருவுருவப்படம் சந்தன மாலையிடப்பட்டு, மின்சார விளக்கு ஒன்று எரிந்த வண்ணம் இருந்தது. ஆளுநர் வந்தவுடன் சட்டசபை துவங்கியது. அந்தந்தக் கட்சியின் ஆட்கள் கருத்தைக் கூறிட நேரம் ஒதுக்கப்பட்டது. ஓரே கூச்சல், குழப்பம், அவமதிப்பு, வெளியேறல் என்று மக்களின் நலத் திட்டத்திற்கு என்று செலவிட வேண்டிய பொன்னான நேரத்தைத் தன் சுய நலத்திற்காகப் பிறரைக் குற்றஞ்சாட்டிய வண்ணம் இருந்தது. அநதக் கூட்டம்... பாதியிலேயே தள்ளி வைக்கவும் முற்பட்டது.

மாலை மங்கிய நேரம்...

புஷ்பக விமானத்திற்கு அருகில் மதுரனும், மகாத்மாவும், தன்னலமற்ற அந்தத் தலைவரின் சோகமான முக பாவனையைப் புரிந்து கொண்ட மதுரன் கவலையோடு கேட்டார். அண்ணலே,,, எதற்கு இந்த மெளனம்? ரொம்பவும கவலையுடன் காணப்படுகிறீர்களே?

நான் இந்த பூமியை விட்டுச் சென்றாலும், என் கொள்கைகள் மூலம் நாடும், நாட்டு மக்களும் சுபீட்சமடைவார்கள் என்று இருந்தேன். ஆனால், எங்கு பார்த்தாலும் கொலை, வன்முறை, ஏமாற்று வேலை என்று ஒரே சுயநலப் பித்தர்களாய் இருப்பதும், யாரோ ஒருவரின் நலனுக்காய்த் தேவையில்லாமல் பிற உயிர்களைக் கொல்வதும் என் மனதை மிகவும் வருத்துகின்றன. மதுரன் பெருமூச்
செறிந்தார். அன்று வெள்ளையனைத் துரத்திவிட்டோம் என்று மார்த்தட்டிக் கொண்டோம். ஆனால், இன்றைய தலைமுறையினர் அந்தக் கலாச்சாரத்திலேயே ஊறித் திளைக்கின்றனர். அதில் வாழ்வதையோ பெருமையாய் இன்று நினைக்கின்றாார்கள். அன்று உயிரையும் துச்சமாய் மதித்துப் பாடுபட்ட இளைய தலைமுறையினர் எங்கே? கேளிக்கைகளும், அலட்சியப் போக்கும் கொண்ட இன்றைய தலைமுறை இளைஞர்கள் எங்கே? இல்லாத போதுதான் அதன் அருமை புரியும் என்பது போல, கேட்ட அனைத்தும் எளிதில் கிடைத்து விடுவதினால் வலிகளும், சிந்திய ரத்தமும் இவ்விளைஞர்களுகுப் புரிய மறுக்கிறது மதுரன்.

சுதந்திர பூமி எவ்வித புதிய தோரணைகளையும் கொண்டிருக்கவில்லை, காந்தியடிகள் வேதனையோடு கூறிக்கொண்டு இருந்தபோதே?! குழந்தைகளின் அணிவகுப்பைக் கண்டார்.

சுதந்திர தினத்தையொட்டிய பெரிய மனிதர்கள் போல மாறுவேடமிட்டுக் கொண்டு ஒரு பேரணி சென்றது. காந்தி, நேரு, இந்திரா, பெரியார், குமரன் என்ற சில தலைவர்களின் வேடமிட்டுக் குழந்தைகள் அணி வகுப்பு செய்தனர். அவர்களின் முன்னே, பாரதமாதா போன்று, வெள்ளை உடையில் நம் தேசியக் கொடியை ஏந்தியபடி ஒரு சிறுமி வந்தாள். கூடவே "சாரே சாஹாகே அச்சா" என்ற பாடலும், "ஜெய்ஹிந்த்" என்ற கோஷமும் ஒலித்த வண்ணம் இருந்தன. அண்ணலின் முகத்தில் புதிய ஒளி வெள்ளம் பிறந்தது.

மதுரன் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இன்றைய நிலை கட்டாயம் மாறும். எதிர்கால இந்தியா புதுமையாய்ப் பூத்துக் குலுங்கும். அன்பும், பண்பும் வளரும் என்று எனக்குள் நம்பிக்கை துளிர்விட்டு விட்டது. இனி நான் நிம்மதியாகச் செல்வேன் ! அண்ணல் புஷ்பக விமானத்தில அமர, கூடவே மதுரனும் மனநிறைவோடு ஏறிட, விமானம் புறப்பட்டு வானை நோக்கிச் சீறிப் பாய்ந்தது,



கோடை வெயிலின் தாக்கம் உடலெங்கும் வியர்வையாய் வழிந்தது. புடவையின் கசகசப்பு, சட்னியை அரைத்து, தாளித்துக் கொட்டி இட்லிகளைத் தட்டில் இட்டு ஒவ்வொன்றாய்க் கொண்டு போய் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு நிமிர, முள்ளங்கிச் சாம்பார் கொதித்தது? தீபாவளிப் பட்சணங்கள் வேறு செய்ய வேண்டியிருந்தது. முதலில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கணவனையும் குழந்தைகளையும் அனுப்பிவிட்டாள் மற்ற வேலைகள் இலகுவாய் இருக்கும் என்று நினைத்தபடியே வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் காயத்ரீ!

காயத்ரீ! ஸ்கூல் வேன் வந்திடுச்சி!
ரவி! ஷைலு! பேகை எடுங்க! கலைந்திருந்த தலையைக் கோதிவிட்டு டையை டைட் செய்து குழந்தைகளை வேனில் ஏற்றிவிட்டுத் திரும்பினாள் காயத்ரீ! அரைமணி முன்பு தந்த காபி டம்ளர் காய்ந்து போய் இருக்க, மதன் அமர்ந்து பேப்பரை மேய்ந்து கொண்டு இருந்தான். ஒரு பெருமூச்சோடு கணவனைப் பார்த்துவிட்டு அடுக்களைக்குள் விரைந்தாள் ஓய்வு ஒழிச்சல் இல்லாத பிழைப்பு. ச்சே! ஒரு சின்ன உதவி கூடச் செய்யக் கூடாது, மனம் வெறுத்துப் போனது. மணி ஒன்பது அடித்தது. இன்னேரம் அவன் குளித்து முடித்திருப்பான், அதற்குள் உடைகள் எல்லாம் தயாராய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வீடே இரண்டாகிப் போகும். பார்த்தால் சாதுவாய் இருக்கும். அவனுக்கு ஆயிரம் கோபம் வரும் காயத்ரீ... ! டிபன் ரெடியா?

ம்... வர்றேன்! சப்தமிட்டுப் பேசக்கூடப் பிடிக்கவில்லை, இலேசாய்க் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. எத்தனை கவனமாய் முயன்றும் மதனிற்குப் பரிமாறிடக் கொண்டு வந்த முள்ளங்கிச் சாம்பார் பீங்கான் பாத்திரம் தரையில் விழுந்ததைத் தடுக்க இயலவில்லை காயத்ரீயால் ?!

காயத்ரீ கணவனின் குரல் காதோடு உரசிடும் பொழுதே நினைவிழந்தாள். மனைவியின் தலையை மடியில் இருத்தி கொண்டு கன்னத்தில் தட்டி, நீர் தெளித்து, இலேசாய் அவள் கண்களைத் திறந்த போதுதான் உயிர் வந்தது மதனிற்கு! கைத்தாங்கலாய் அணைத்துக் கட்டிலில் படுக்கச் செய்தான். என்னம்மா செய்யுது ? திடீர்னு மயங்கிட்டியே? ஆஸ்பிட்டலுக்குப் போவாமா?

வேண்டாங்க ! உங்கம்மா, உங்கக்கா எல்லாரும் ஊரிலிருந்து தீபாவளிக்கு வருவாங்க. பட்சணமெல்லாம் தயார் செய்யணும். வீடும் போட்டது போட்டபடியே இருக்கே? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.

சொன்னா கேட்க மாட்டியே... இரு வரேன். மதன் எங்கோ விரைந்தான் அடுக்களையில் ஏதோ பார்த்திரங்களின் சப்தம் எழுந்தது. கணவனின் பரிவான வார்த்தைகளில் இதமாய் உணர்ந்தாள். திரும்பிய மதனின் கையில் சூடாய் ஹார்லிக்ஸ் இருந்தது. இதைக் குடித்துவிட்டு தூங்கு காயத்ரீ !

அன்றைய தினம் முழுக்க அவளை விட்டு அகலாமல் இருந்தான் மதன். இத்தனை வருடத் தாம்பத்தியத்தில் மனைவிக்கென ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்காத மதனா இத்தனை அக்கறையோடு தன்னைக் கவனித்துக் கொள்வது எனும் நினைப்பில் மலைத்தாள் காயத்ரீ !

ஏன் அப்படி பாக்குறே காயத்ரீ! இன்னும் மயக்காவே இருக்கா ?

எத்தனையோ வேதனைகளையும் கஷ்டங்களையும் நான் தாங்கி இருக்கேன். அப்போ எல்லாம் ஒரு துரும்பைக் கூட அசைக்காத நீங்க .... நீர் தளும்பும் விழிகளோடு மனைவியைக் கண்ட மதன் ஆறுதலாய்த் தலையை வருடினான்.

பைத்தியம் என்னோட பளுவை நீ சுமந்தே! ஒரு ஆண் தன்னோட கடமையைச் சரியா செய்யக் காரணமே மனைவிதானே! வெளிப்படுத்தத் தருணம் உருவாகாததால் அன்பு இல்லைன்னு ஆயிடுமா என்ன?

கணவனின் இத்தனை அன்பும் அரவணைப்பும் தனக்குக் கிடைக்குமெனில், கடவுளே! எனக்கு அடிக்கடி உடல் நலமின்றிப் போகட்டும் என்று கடவுளைப் பிராத்திக்க துவங்கினாள் காயத்ரீ! யாரோ உலுக்குவது போல இருந்தது. கண்களைத் திறந்தாள் மதன் எதிரில் நின்றிருந்தான்

இப்போ பரவாயில்லையா காயத்ரீ?! இவர் எப்போது உடை மாற்றிக் கிளம்பினார் என்று யோசிக்கும் போதே? என்ன முழிக்கிறே காயத்ரீ?! நான் ஆபீஸ் போக லேட்டாகுது! குளிச்சி நானே டிரஸ் மாத்திக்கிட்டேன். எழுந்து லஞ்ச் பேக் ரெடி பண்ணு! குழப்பங்கள் நிறைந்த போதும் எழுந்து லன்ஞ் பாக்ஸ் ரெடி செய்தாள், அப்படியெனில் நடந்தவை யெல்லாம்.....? கேள்வி மிச்சமிருந்தது.

நீ போய் மாத்திரை போட்டு ரெஸ்ட் எடு !

ஏங்க எனக்கு உடம்புக்கு முடியலையே! ஒரு நாள் வீட்டிலேயே இருக்கலாமே?!

விளையாடாதே காயத்ரீ! லீவெல்லாம் எடுக்க முடியாது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வேலையைப் பாரு அம்மாவும் அக்காவும் நைட்டு வந்திடுவாங்க. தவிரவும், நானென்ன டாக்டரா? அவள் பதிலை எதிர்பாராமல் போய்விட்டான்.

காயத்ரீ சோர்ந்து போய் அமர்ந்தாள். இருந்தாலும் பெண்களுக்கே உரிய குணம் போல் அவருக்க ஏதும் அவசர வேலையிருக்கும். இல்லேன்னா போக மாட்டாரு என்று மனதைக் கட்டுப்படுத்திட முயன்று தோற்றாள், கீழே சிதறிக் கிடந்த குழம்பைப் போல் மனமும் சிதறியது. திருமணம் எனும் பேரில் சகலமும் துறந்து உழைப்பையும், உடலையும் தந்து உணர்வையும் இழந்து தவிக்கும் மனைவியின் மனதை என்றுதான் ஆண்கள் உணரப் போகிறார்களோ?!

இது காலங்காலமாய்த் தொடரும் நிகழ்வு என்பதை ஏற்க இயலாமல் தவித்து மறுகினாள் காயத்ரீ. இந்தியப் பெண்கள் எப்போதும் தங்கள் கற்பனைகளோடே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் அல்லவா?

காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்,,,,

நிற்க நிழலின்றி !
நிமிர வகையின்றி !
இரத்தமே ஆறாய் !
எம்மெய்யே தோணியாய் !
உயிர் காக்க எமக்கு !
கானி நிலம் வேண்டும் பராசக்தி
கானி நிலம் வேண்டும்

தொடரும் சொந்தங்கள் விலகிடும் நேரம்
உறக்கமே தொலையாத இரவின் நீளம்
விடியலில் இரத்தப் பொட்டுக்களால்
எங்கள் வாசலில் கோலம்

காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்

கடமைகள் மறந்து காதல் துறந்து
பயமென்னும் போர்வையில்
படுத்துறங்கும் எம்மக்களே
நித்தமும் குண்டுகள் பொழியும்
புண்ணிய பூமியில் !

கானி நிலம் வேண்டும் பராசக்தி
கானி நிலம் வேண்டும்

நாடு நகரம் மறந்து
எம் குல பெண்டிர்களின் மானமிழந்து !
போராடி தோற்ற பாதங்கள்
வந்தடைந்தது எம் சொந்த மண்ணில் !

ஆம் !

எம் சொந்த மண்ணிலேயே அகதியெனத் திரியும் !
அடிமை நிலையேன் ஏனடி பராசக்தி

காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்.






செம்மண் பழுப்பேறிய சாலை சாலையோரத்தில் நெடு நெடுவான மரங்கள் லெட லொடவென்று தகரங்களைச் சுமந்த பேருந்தின் ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தான் கதிரேசன் காற்றில் ஆடிய முள்செடிகள் முகத்தை வருட முயன்று தோற்றுப் போனது. அனாலாய் வீசிய காற்றில் பறந்த செம்மண் இலேசாய் முகத்தில் அப்பிட ஆழமாக ஒரு முறை அதன் வாசத்தை தேடி முகர்ந்தான் அவன்.


மூன்று வருடங்களாகி விட்டது இந்தக் காற்றைச் சுவாசித்து, அரைக்கால் டவுசர் அணிந்து, கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்ததும், தோழர்களுடன் கூட்டாஞ்சோறு ஆக்கியதும் நினைவிற்கு வந்தது. பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னையை நோக்கிப் பயணப்பட்டு, போக்குவரத்து நெரிசலில் எல்லாவற்றிற்கும் காத்திருந்து, க்யூவில் நின்று சென்னை வெயிலில் தகித்து, கிடந்த நிமிடங்கள் எல்லாம் கரைந்து வேகமாய் படிப்பை முடித்துவிட்டு, எப்போதடா சொந்த மண்ணிற்கு வந்து, சேருவோம் என்று தவித்து ஒரு வழியாய் ஊருக்கு வந்து சேர்ந்து விட்டான். 

ஆத்தா அவனுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பாள். ஒத்தைப் பிள்ளையென்று கொள்ளைப் பிரியம் அப்பனில்லாத குடும்பம் வேறு, பிள்ளையையே ஆணிவேராய் எண்ணி வாழ்ந்து வருபவள். தன் மகன் பட்டணத்திற்குப் போய் பெரிய படிப்பு படிப்பதில் பெருமை பிடிபடாது அவருக்கு, இன்று அவனைச் சந்தித்து அகமகிழ்ந்து போய்விடுவாள். 

வேகமாய் வீட்டினைத் தேடி சென்றான். எதிர்ப்பட்ட அத்தனை பேரையும் பார்த்து பேசி, சிலரிடம் சிரித்து குசலம் விசாரித்துச் சென்றான். ஆத்தா எதிர்பார்த்தபடியே ஒரு பெரிய கும்பலையே கூட்டி வைத்திருந்தாள். இதோ வந்திட்டானே எம்மவன்... பாரு ராசா மாதிரி இருக்கான், இனி வேறயென்ன வேணும்? பாரு ராசாத்தி அவன் வாய்திறந்த இங்கிலிபீசு தான் வரும். தமிழே வராது. 


எல்லாரும் ஏதோ வானத்தில் இருந்து வேற்று கிரகவாசியைப் போல் அவனைப் பார்த்தார்கள். ஆத்தா பசிக்குது சோறு கொண்டாரீயா? என்றான். 

உம்பிள்ளையென்ன ஊரிலிலே இல்லாத சீமைத்துரையா? 

ஆமாண்டி சீமைத்துரைதான் எம்புட்டு ஸ்டைலா வருவான் பாரு.......?! பார்வைகள் அனைத்தும் அவனின் கிராமியத்தனமான உருவமும், ஆத்தா என்ற பேச்சையும் கண்டு .....

பல்சர்




கருப்பு நிற பல்சரைச் சுற்றித்தான் காலனி பசங்களின் கூட்டம் பதினைந்து குடும்பத்தினர் அடங்கிய சற்று பெரிய காலனி அது. எல்லாருமே நடுத்தரக் குடும்பத்தினருக்கும் சற்றே கீழுள்ளவர்கள் தான். சைக்கிளைத் தாண்டி அவர்கள் வேறெந்த இரண்டு சக்கர வாகனங்களைப் பார்த்ததில்லை, சில பேருக்கு நடைபாதை பயணம் மட்டுமே, வறுமை குடுத்தனம் நடத்தும் காலனி அது?! 

சுல்தான் பாய் தான் முதன் முதலில் பல்சர் வாங்கி இறக்கியுள்ளார். அவரும் அலுவலகம் ஒன்றில் கிளார்க்காக பணிபுரிந்தவர், தற்போது அவருக்கு மானேஜர் பதவி கிடைத்துள்ளதால் சைக்கிளில் சென்று வந்தால் கெளரவாக இராது என்று ஆபீஸ்ஸில் லோன் போட்டு பல்சர் வண்டியை வாங்கினார். மற்ற பணிகள் எப்படியோ வண்டியை தினமும் துடைப்பதும், கழுவுவதும், என ஒரு தூசி துரும்பு பட விடமாட்டார், 

ஒருமுறையாவது அந்த வண்டியை ஓட்டிப் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் மிகுந்து போய் இருந்த அந்த காலனி இளசுகளிடையே?

அதில் ஒருவன் தான் அரவிந்தன். அவனிடம் இருந்த ஓட்டை சைக்கிளிலேயே கைவிட்டபடி வெகு வேகமாய் சில சாகசங்களுடன் ஓட்டக் கூடியவன். அப்படிப் பட்டவனின் கவனம் சுல்தான் பாயின் பல்சரின் மேல் படிந்தது. இலேசாய் முகத்தில் அரும்பிய பூனை மீசை போன்ற ரோமங்கள் ஒரு திமிரைத் தோற்றுவித்தது. அவனின் உடலில், இளங்கன்று பயமறியாது அல்லவா? அவனுக்கும் சுல்தான் பாயின் பைக்கின் மேல் காதல் பிறந்தது. ஒரு ஞாயிறு காலனியில் உள்ள சிறுவர்கள் எல்லாரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது கூட, போர்வீரக் குதிரையைப் போயிருக்கும் அந்த பல்சர்தான்.

நன்றாக மினுமினுவென்று அதன் கருமை நிறம் வெயிலில் பட்டு மினுமினுத்தது, 

போனா அந்த வண்டியிலே போகனுன்டா? சும்மா குதிரை மாதிரி, 

ம்கூம்... அது சுல்தான் பாய் வண்டி அதன் பக்கம் நாமெல்லாம் நெருங்கக் கூட முடியாது, அவராவது தர்றதாவது, 

பேசாம நம்ம வீட்லே இதே போல வாங்கச் சொல்லாமா?

அதோட விலை எவ்வளவுடா இருக்கும்?

ஐம்பதுக்கும் மேல இருக்குமாம், அதுக்கு நாம எங்கே போறது?

கரெக்டுதான்?! ஆனா ஆசையா இருக்கேடா?

சுல்தான் பாய்க்கு தெரிஞ்சா தோலை உரிச்சிடுவாரு? பாபு சொல்ல எப்படியாவது செய்தே தீருவேன்னு மனதிற்குள் வன்மம் வளர்த்தபடி அலைந்தான் அரவிந்தன்.

அன்றைய காலைப்பொழுது, சுல்தான் பாய்க்கு சற்றே மோசமாகத்தான் விடிந்தது, காலையில் கீழே கொட்டியிருந்த எண்ணெய்யில் வழுக்கி விழுந்து, கால் எலும்பு சுலுக்கி கட்டுபோட்டு நடக்க இயலாமல் இருந்தார். ஆனாலும், வாசலில் சேர் போட்டு அமர்ந்தபடியே பல்சரை யாரும் தொடவிடாதபடி, 

அதையென்ன நாயா தூக்கிட்டுப் போகப் போகுது? எப்போ பார்த்தாலும் அதுக்கே காவல் இருக்கீயளே? கட்டின பொண்டாட்டி பிள்ளைகளைக் கூட இப்படி பார்த்துக்கிட்டது இல்லை, சாப்பிடாம தூங்காம என்ன பழக்கமோ? மனைவி முகவாயில் இடித்தபடி உள்ளே சென்றாள். 

பல்சர் மூன்று நாட்களாக துடைக்காமல் தூசி படிந்து போய் இருந்தது, அரவிந்தன் அங்கு ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் பஞ்சோடு வந்தான். பல்சரை துடைக்க துவங்கினான். வழக்கமாய் தொடக் கூட அனுமதிக்காத சுல்தான் பாய் இன்று அரவிந்தனைத் தடுக்கவில்லை, அன்றிலிருந்தது தினசரி பல்சரைத் துடைப்பது அவனின் வேலையாகிப் போனது, 

பரவாயில்லைடா சொன்னமாதிரியே நம்ம அரவிந்தன் சாதிச்சிட்டான். சுல்தான் பாய் வண்டியைத் தொடக்கூட விடமாட்டார் இப்போ அரவிந்தனை ஒன்றும் சொல்லவில்லையே?

போடா, ஓட்டவா செய்திட்டான் சும்மா துடைக்கிறது தானே அதுக்குப் போய் பெரிசா அலட்டிக்கிறாயே

அரவிந்தன் நினைச்சா அதுவும் செய்வான்டா, மார்த்தட்டிக்கொண்ட நண்பர்களுக்காகவாது, கட்டாயம் ஓட்டியே தீர வேண்டும்.

ஒரு வழியாய் சுல்தான் பாயின் அபிப்ராயத்தைப் பெற்றாகிவிட்டது. பத்து நாட்களில் அவரும் நடக்கத் துவங்கி மறுபடியும் பல்சரை ஒட்ட ஆரம்பித்தாலும் அரவிந்தனால் பின்னால் உட்கார்ந்து போக முடிந்தது. 
ஒரு நாள் பயம் விட்டுக் கேட்டே விட்டான் நேரடியாய்? பாய் ஒரு நாள் எனக்கு வண்டி ஓட்ட ஆசையாய் இருக்கு என்றான். 

என்னடா அரவிந்தா விளையாடுறீயா? இந்த வண்டியோட விலை உனக்குத் தெரியுமா? ஒரு ரூபா இரண்டு ரூபா இல்லை, உனக்கு இப்போ சின்ன வயசு என்னதான் நீ நல்லா சைக்கிள் ஓட்டினாலும் உனக்கு பேலன்ஸ் வராது, அப்படியே வண்டிக்கு ஏதுனா ஆனாலும், காசுதான் செலவாகும், ஆனா உனக்கு அடிகிடி பட்டுட்டா உங்கம்மா உங்கப்பாவிற்கு யாரு பதில் சொல்றது? என்று நாசூக்காக மறுத்துவிட்டார்.

பிறகு, ஒரு சில நாட்கள் கழித்து அரவிந்தனை வழக்கம் போல் ஸ்டாண்டு போட்டு நிறுத்தச் சொன்னார், சுல்தான் பாய், அப்போது தான் அரவிந்தன் உடனே சட்டென வண்டியை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்டு அடித்து விடலாம் என்று தோன்றிய எண்ணத்தை செயல்படுத்தினான். வண்டியை வேகப்படுத்தினான்.

டேய் அரவிந்தன் வண்டியை ஓட்றான், சூப்பர்டா அரவிந்தா இன்னும் வேகமா போடா என்று நண்பர்களின் ஆரவாரக் குரல் பின்னால இருந்து கேட்டது அவன் உடம்பில் புது வேகம் பிறந்தது, கைகளை எடுத்து விட்டு வண்டியை ஓட்டினான். எப்படிடா என்று நண்பர்களிடம் கேட்டான். அதுதான் தெரியும், நிலை தடுமாறியது, 
வண்டி தடம் புரண்டது, அரவிந்தன் தூக்கிவீசப்பட்டான். தலையிலிருந்து ஏதோ சூடாக வழிந்தது. 

அரவிந்தன் கண்விழித்தபோது, அம்மா டாக்டரிடம் அழுது கொண்டிருந்தாள். அம்மா உங்க பையனுக்கு தலையில் அடிபட்டு இருக்கு, காலில் பலத்த அடி அவர் நடக்க எப்படியும் ஆறுமாதம் ஆகும் என்று சொல்லிக் கொண்டிருந்தார், அம்மா கதறினாள். தூரத்தில் ஒரு புள்ளியாய் சுல்தான் பாய் கண்களை மூடிக்கொண்டான். 
கண்ணோரம் ஈரமாய்.....! வேண்டியதுதான் தனக்கு இந்த தண்டனை என்று புரிந்தது.

கண்களில் பத்துநாட்கள் நடக்க முடியாமல் இருந்த சுல்தான் பாய் நினைவுக்கு வந்தார், கூடவே அவர் விழ காரணமாய் இருந்த எண்ணெய் பாட்டில் இன்னமும் அவன் அலமாரியில் இருப்பதும் !
08 April 2012

திறப்புவிழா

திறப்புவிழா....


நீ ..................நீராய்
உடலைத் தழுவினாய்..
நிழலாய் சூடேற்றினாய்..

பார்வைகள் பாதமிருந்து
தவழ்ந்திட,
விரல் குழந்தை மெய்யதனில்
வீணை மீட்டிட,
நாதமென புறப்பட்ட
அந்த மொழி புரியா
விளக்கங்கள் காதோரம்
காவியக் கதை பாடிட!

நம்மிருவரையும் இன்று
குத்தகைக்கு எடுத்திருக்கும்
காமனின் மலர் கணைகள்
காதற் கவிதைகள் எழுதிட
துடிக்கிறது !

நெகிழ்ந்தது மனம்
மட்டுமல்ல
உடைகளும் தான்!

எழுதுகோலின்றி
வெள்ளைக் காகிதமின்றி
காதற் மை கொண்டு நீ
தீட்டிய ஓவியத்திற்கு !

இன்று காவியத்தலைவன்
நடத்து திறப்பு விழா.!

இமைகள் ஒன்றோன்றொன்று
தொடாமல் விலக்கி வைக்கின்றன
தூரம் போன தூக்கத்தை
தூக்கி வர தூதுவனின் துணை
தேடுகின்றேன்

ஒதுக்கல்

சுந்தரேசன் அன்று காலையில் தான் தன் முதல் உதயத்தை சென்னையில் தன் கூரை வீட்டில் பார்க்கிறார். எத்தனை தினங்கள் ஆகிறது, சொந்த ஊரில் சுதந்திரந்தமாய் சுற்றித் திரிந்த காலங்கள் போய் பணம் என்னும் ஒன்றிற்காக நாடு கடந்து அங்கேயே பல உதயங்களைக் கண்டபோது இல்லாத ஒரு புத்துணர்ச்சி இப்போது தன் உறவுகள் வாழும் மண்ணில் காணும் போது எத்தனை இன்பமும், அமைதியும் மனதிற்கு கிடைக்கிறது. 20 ஆண்டுகள், இராமருக்கு கூட 14 வருடங்கள் தான் ஆனால் தன்போன்ற வறுமையில் உறவுகளைத் துறந்து நாடுகள் கடந்து பணிபுரிபவர்களுக்கு எந்நாளும் வனவாசங்கள் தான்.

வாசலில் பேப்பர் போடும் சப்தம் கேட்டது, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, பேப்பரைக் கையிலெடுத்தார். மனைவி வசுமதி குளித்து முழுகி, மங்கலமாய் பொட்டிட்டு காபி தபராவை நீட்டினார்.

சுந்தரேசன் மனைவியைப் பார்த்தார். வசுமதி உனக்கு ஒண்ணும் அத்தனை வயசாயிடலை, இப்பக் கூட எத்தனை அழகா இருக்கே தெரியுமா?

ஏது நரை கூடிய பிறகுமா?

அந்த நரை தாண்டி உனக்கு அழகே?

நல்லாயிருக்கு பிள்ளையில்லாத வீட்டுலே கிழவன் துள்ளி விளையாடிய கதையா,,, காலம் போன கடைசியிலே கிருஷ்ணா ராமான்னு இராம இதென்ன லவ் டயலாக் அடிச்சிக்கிட்டு, புன்னகைத்தபடியே அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள் வசுமதி.

காலம் போன கடைசியிலா அப்படியென்ன வயதாகிவிட்டது எனக்கு ? 56 வயதெல்லாம் ஒரு வயதா? காலையில் ஷேவ் பண்ணும் போது தலையில் நிறைய வெள்ளை முடிகள் தோன்றி இருந்தது நினைவிற்கு வந்தது. வசுமதி சொன்னதைப் போல் இதையெல்லாம் நான் காலம் கடந்து தான் செய்கிறேனா,,,,? என்று மனதில் கேள்வி எழுந்தது.

இதே வசுமதி திருமணமான புதிதில் இப்படி காபி கொண்டு வந்து தரும்போது இழுத்து அணைத்து மடியில் கிடத்திக் கொண்டதையும், அம்மாவின் குரல் கேட்டு அய்யோ அத்தை கூப்பிடறாங்க, விடுங்க என்று அவள் என் கைகளில் இருந்து விடுபடத் தவிப்பதையும் நினைத்துப் பார்த்தது மனது. ம்...அது ஒரு காலம். சில நிகழ்வுகள் அசைபோடும் போதும் எத்தனை இன்பமாய் உள்ளது. அப்படி தினம் தினம் அனுபவிக்க வேண்டிய வாழ்க்கையை விடுத்து கடல் கடந்து சென்றதால் இன்று இழந்தைவைகள் அநேகம் அல்லவா. இனியென்ன முயன்றாலும் என் இளமைக்காலம் திரும்பி வராதே? என்று சிந்தனையிலேயே காலையில் டிபனை சுவைத்தார். இட்லி கொத்துமல்லிச் சட்னியோடு, வெங்காயப் பக்கோடாவும் வசுவின் கைவண்ணம். எத்தனை மணம்

என்னங்க சாப்பிடாம என்ன யோசனை?

ஒண்ணும் இல்லை வசு,! அங்கேயெல்லாம் டிபன்ங்கிறே பேர்லே தருவான் பாரு இதே இட்லிதான் ஆனா கல்லு மாதிரி இருக்கும். ஆயிரந்தான் சொல்லு உன் கைப்பக்குவம் அருமை தான். ஏய்,,,, இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி கண் கலங்குறே.?

உழைக்கிறேன்னு இப்படி சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்பட்டு வந்திருக்கீங்க? நான் நல்லா சமைச்சு என்ன புண்ணியம், இத்தனை காலத்திலே உங்களுக்கு என் கையால பரிமாறிட முடியலையே? மனைவியின் ஆதங்கத்திற்கு தலையாட்டிட முடிந்ததே தவிர வேறெதுவும் பேசிட தோன்றவில்லை, ஏனோ மனம் கனத்தது.

அம்மா எங்க காலேஜ்ஜில கல்சுரல் ஆரம்பிக்கிறது, நான் கூட ஏதாவது நிகழ்ச்சியில் கலந்துக்கலாமான்னு யோசிக்கிறேன். என்னம்மா கலந்துக்கிறது, நீ தான் நல்லா ஐடியா தருவியே? என்று மகள் காலைக் கட்டிக் கொண்டாள்.

உனக்குத்தான் பாட்டு நல்லா வருமே? பாடு கீதாகுட்டி

எப்படிம்மா, அத்தனை பேர் முன்னாலேேயும் எல்லாமே வாலுங்க, கொஞ்சம் சுருதி பிசகினாலும் அவ்வளவுதான். நான் காலி,,,

பயப்பட்டா எப்படிடா இதுக்கா உனக்கு கஷ்டப்பட்டு பாட்டு கத்துக் கொடுத்தது, நீயும் எத்தனை ஆர்வமா கத்துக்கிட்டே உன்னால முடியும் டா இப்படிப்பட்ட மேடைகள் தான் உன்னை இன்னும் உயரத்திற்கு கொண்டு போகும். முடியாதுன்னு சொல்லாம ஒப்புக்கிட்டு அதுக்கு ஏத்தாமாதிரி பயிற்சிகளை செய்... அம்மாவின் வழிகாட்டலில் மகிழ்ந்து முத்தமிட்டு சென்றாள் மகள்.

வர்றேம்மா,,,, வர்றேப்பா....?!

மகன் கவின் ஐ.டி துறையில் வேலை செய்கிறான். நல்ல சம்பளம் தான் இன்னும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கக் கிடைக்க மேற்கொண்டு நல்ல சம்பளமும் உண்டு. இரவு முழுக்க வேலை செய்துவிட்டு பகலில் சில நேரம் தூங்குவான். ஆள் தான் வளர்ந்து விட்டானே தவிர, ஒவ்வொரு வேலைக்கும் அம்மா வேண்டும்.

அம்மா நம்ம குருவுக்கு இன்று கல்யாணம், என்னை நைட்டே வரச்சொல்றாங்க. போகட்டுமா?

போயிட்டு வாடா....

சுந்தரேசன் பேசினார். என்ன வசு, நைட் சின்னபசங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியாதா? இவனும்...

கவின் அப்படியெல்லாம் இல்லை என்னைக் கேட்காம சின்ன காயைக் கூட நகர்த்தத மாட்டான். ஆனா அதுவும் தவறுங்க இப்போ எல்லாத்துக்கும் என்னையே எதிர்பார்த்துக் கொண்டே இருந்தால், நாளைக்கு பொண்டாட்டி வந்திட்டா அவளைத் தேட மாட்டான். அம்மாவின் ஆசைன்னு ஏதாவது ஒரு காரணம் சொல்லி சுயமா முடிவெடுக்கறதைத் தள்ளிப் போடுவான். நம்ம பிள்ளைக்கு சொத்தை விடவும் சுயம் முக்கியம் இல்லையாங்க.... போயிட்டு வரட்டும், நல்லது கெட்டதுன்னு நாலையும் கத்துக்கிட்டாத்தான் அவனும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுவான்.

மகனும், மகளும் கிளம்பி விட்டனர். நாம் பெற்ற பிள்ளைகள் ஆனால், அதுங்களின் குணமோ, அவர்களுக்கு எதில் ஆர்வம் அதிகம், எது பிடிக்காது என்று எதுவும் தெரியாது, ஒரு பொம்மைக்கு முத்தமிட்டு செல்வதைப் போல அப்பா போயிட்டுவரேன்னு சொல்லிட்டு போவதைப் போல் இருந்தது சுந்தரேசனுக்கு. அங்கே எல்லாமுமாக வசுமதியே நின்றிருந்தாள். இது யார் தவறு,,,,,?!மனம் அடைந்திட்ட வெறுமையைப் போக்க வசுமதி நான் நம்ம மேலத்தெரு நடேசன் வீடுவரை போயிட்டு வர்றேன் என்று காலணிகளை மாட்டிக் கொண்டு கிளம்பினார், சூரியன் சுள்ளென்னு நெற்றியில் அரைவது போல் தன் வெப்பத்தை பூமியின் மேல் இறக்கினான்.

நடேசன் நண்பனைக் கண்டதும் அன்போடு வரவேற்றார். டேய் எப்படிடா இருக்கே? பார்த்து எத்தனை வருஷமாச்சு ! உன்னைப் பார்க்கணுமின்னு தங்கச்சிக் கிட்டே கேட்டுகிட்டே இருந்தேன். பத்மா காபி கொடும்மா..

வாங்கண்ணா நல்லாயிருக்கீங்களா? வசுமதியைக் கூட்டி வந்திருக்கக் கூடாது?

இருக்கேம்மா,,,,வருவாம்மா இப்போ கொஞ்சம் வீட்டில் வேலையிருக்கு? உன் பையன் எங்கேடா?

அவன் இப்போதான் பளஸ் டூ முடித்திருக்கிறான். 96 பர்சன்ட்டேஜ் என்ன கோர்ஸ் எடுக்கலான்னு கேட்டு துளைத்திட்டான். ஆடிட்டிங் போடச் சொல்லியிருக்கிறேன். அதே நேரம் நடேசனின் மகன் வந்தான்.

அப்பா நீங்க சொன்னா மாதிரியே ஆடிட்டிங் போடப்போறேன்.

பாருடா இவனை படிக்கப் போறவன் இவன் உனக்கு எது முடியுமோ அதை படிடா என்றால், என்னைத் துளைக்கிறான்.

அங்கிள் நான் பிறந்ததில் இருந்து எனக்காக பார்த்துப் பார்த்து எது சரி எது தவறுன்னு செய்யறது அப்பாதான். என்னுடைய விருப்பு வெறுப்பு பலகீனம், பலம் எல்லாமே என்னை விட அவருக்குத்தான் நல்லாத் தெரியும். அதனால என்னுடைய எதிர்காலத்தை நிர்மாணிக்கிற பொறுப்பையும் அப்பாகிட்டேயே விட்டுட்டேன். இது தப்பா?!

இல்லை என்பதைப் போல் ஆமோதித்தார். சுந்தரேசன். நடேசனின் பிள்ளை அவனிடம் எத்தனை அன்னியோன்யமாய் இருக்கிறான் என்று மனம் சந்தோஷப்பட்டாலும் ஒரு மூலையில் இந்த சின்ன முத்தத்தைக் கூட நாம் இழந்து விட்டோமோ தன் பிள்ளைகளிடமிருந்து என்றும் தோன்றியது, கீதாவும், கவினும் தாயை இறுக அணைத்தபடி முத்தமிட்டது நினைவில் ஆடியது.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர்கள் இருவரும் தனியாய் தோட்டத்தில் அமர்ந்து பேசிடத் தொடங்கினர்.

ஏண்டா எத்தனைபேர் அப்பப்போ லீவுலே வந்து போறாங்க, அப்படி கூட நீ சரியா வரலையே ஏண்டா?

என் குடும்ப நிலைமைதான் உனக்கே தெரியுமே? நாலு அக்கா அப்பா திடுமென தவறிட்டாதாலே பாதியிலேயே என்னோட படிப்பும் நின்னுபோச்சு, இரண்டு அக்காக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகியிருந்தது, ஒருத்திக்கு நிச்சயம் செய்தாச்சு, தம்பியோட படிப்பு, கடன்னு கழுத்தை நெரிச்சவன்தான் அதிகம் என்ன செய்யறது? என் பொண்டாட்டியும் எல்லா நகைகளையும் கழட்டி தந்திட்டா, வேற வழியில்லை, கல்யாணமான இரண்டு மூணு வருஷத்திற்குள்ளாகவே நான் வெளிநாடு போக வேண்டியதாகப் போயிடுச்சு. லீவுலே வந்தாலும் கட்டின பொண்டாட்டி கிட்டே கூட சகஜமா பேசமுடியலை,

எதுவும் நிரந்திரம் இல்லைன்னு மனசுகுள்ளே ஒரு பட்சி சொல்லிட்டே இருக்கும். யோசிச்சுப் பாரு, அன்பும், அன்னியோன்யமும் மனசுக்குள்ளே நிரம்பி வழிந்தாலும் அதை வெளிப்படுத்திட முடியாத சூழ்நிலை, ஒரு கட்டத்திலே குடும்பச் சுமைகள் கொஞ்சமா குறைந்து போச்சு, ஆனா மனசில ஒரு இடைவெளி விட்டது. இதோ இப்போ கூட உன் வீட்டுலே இருக்கிறா போல ஒரு நிறைவு ஒட்டுதல் இல்லைடா...

என்னடா சொல்றே? சுந்தரேசா, அண்ணி எத்தனை கட்டுக் கோப்பா குடித்தனம் நடத்தினாங்க...இன்னைக்கு இந்த ஊரிலே உன் குடும்பத்துக்குன்னு ஒரு தனி அந்தஸ்த்து இருக்கின்னா நீ கஷ்டப்பட்டு பணம் அனுப்பினதிலும் அண்ணி அதை நல்ல முறையில் செலவிட்டு, உன்னுடைய அக்கா தங்கைகளுக்குன்னு நல்லது கெட்டது செய்ததும்தான். இதைவிடவும், உன் பொண்ணு படிக்கிறா பிள்ளை கைநிறைய சம்பாதிக்கிறான். அவன் சம்பாத்தியமே போதுமே உங்க இரண்டு பேருக்கு! குடும்பம் நிறைந்திருக்கிறது. இதைவிட ஒரு தகப்பனா, குடும்பத்தலைவனா உனக்கு என்னடா வேண்டும்.

அது நாளைக்குடா,,,,! பொதுவாக ஆண்கள் தொழில் வேலைன்னு பொழுதன்னைக்கும் வெளியே போயிடுவாங்க. அதனால குழந்தைகள் அம்மாகிட்டேதான் அதிகமா ஒட்டும் ஆனா, என்னை மாதிரியான ஆட்கள் இந்த சொந்தங்களை எல்லாம் தொலைச்சிட்டு, வெளியூர் போயி வரும் போது அப்பாங்கிற அடைமொழியைத் தவிர வேற எந்த ஒட்டுறவும் இல்லை நடேசா... நான் காலையிலே இருந்து உன் வீட்டுலே பார்த்தேன். உன் பிள்ளைங்க எத்தனை அன்போடு நடந்த விஷயத்தை பகிர்ந்துகிறாங்க. அவங்க தேவைகளை கேட்டு பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆனா என் வீட்டுலே நான் வந்து முழுதாய் ஒரு நாள் ஆச்சு, என் பிள்ளைகள் எல்லாத் தேவைகளுக்கும் வசுமதியைத் தான் தேடுறாங்க. அதுக்காக அப்பாங்கிற என் மேல் அன்பு இல்லைன்னு நான் சொல்லலை, பணம் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் தான் எங்களுக்குள்ளே ஒட்டுதல் இருக்கு, ஆனா, தன் தாயிடம் அவங்க இயல்பா பேசறதையும், சண்டைபோடுறதையும், விளையாட்டு செய்யறதையும் பார்க்கும் போது இலேசா ஒரு பொறாமையே வருதுடா? என்பிள்ளைகள் என்னையே ஒரு விருந்தாளி மாதிரி நினைக்கக் காரணம், அதுங்களோட மனசில ஒரு ஒதுக்கல் வர காரணம் புரியும் போது என் இயலாமையை நினைத்து மனசு வலிக்குது.

நடேசன் ஏதும் பேசத் தோன்றாமல் நண்பனையே பார்த்தார். விதிவசம் பணம் தேடி ஊர் ஊராக அலைஞ்சு இன்னைக்கு என் குடும்பம் ஒண்ணா நிற்கிறது. ஆனா நான் தாமரை இலைத் தண்ணீரா அதில் மிதக்கிறேன். இனிமே அந்த ஒட்டுதல் கிடைக்குமின்னு எனக்கு நம்பிக்கை இல்லை, வசுமதி கூட எனக்கு என்னனென்ன வேணுமா பார்த்து பார்த்து செய்யுறா? அதில் அபரிதமான அன்பு தெரியுது? ஆனா, எனக்கு சராசரியா நான் வேலை ஏவுனா என்னங்க எனக்கே உடம்புக்கு முடியலைன்னு ஒரு அவசர பதில் வரணும். உங்கப்பாவுக்கு வேலையே இல்லைன்னு அவ பிள்ளைங்க கிட்ட செல்லமா புலம்பணும். என்கூட சின்ன சின்ன சண்டைகள் போடணும். ஆனா இயல்பு நிலை இல்லாம நம்ம புருஷன் இத்தனை நாள் கஷ்டப்பட்டு வந்திருக்காறேங்கிற, அந்த அனுதாபம் தாண்டா அவ அன்பில் வெளிப்படறா மாதிரி எனக்குத் தோணுது என்றார் சுந்தரேசன்.

நான் வந்தேன் ஏதோ மனசில உள்ளதை பேசிட்டேன். ஆனா இது எதுவும் வசுமதிக்கு தெரியவேண்டாம். மனசு சங்கடப்படுவா....! நாள் பட பிரிந்து வந்தால், உறவுகளின் உண்மையான அன்பும் அக்கறையும் கூட பாரமாத்தான் தெரியுது. என் கூட்டை விட்டு ரொம்ப தூரம் பறந்து போயிட்டேன். இப்போ திரும்பி வந்து, குருவிகள் ஏற்றுக் கொண்டாலும், என்னாலே மட்டும் ஏனோ ஒதுக்கல் இருந்திட்டே இருக்கிறது, என்று கண் கலங்கினார் சுந்தரேசன்.

20வருட வலி இன்று மெல்ல மெல்ல வெளியே வந்து தன் புண்ணிற்கு களிம்பு தேடி கிடைக்காமல் தவிக்கிறது. தேற்ற வழி அறியாமல் அமைதியாய் இருந்தார் நடேசன்

மதுமிதா தன் சக நண்பர்களுக்கு எல்லாம் இனிப்பு வழங்கிக் கொண்டு இருந்தாள். 

ஹாய் மது எனிதிங் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் எல்லாம் தர்றீயே?

ம்.. நான் பிராஜெக்ட் மேனேஜரா பிரோமோட் ஆகியிருக்கேன் அதுக்குத்தான் எல்லாம்.

இஸிட்.... வாழ்த்துக்கள்

நன்றி

ஹேய் நரேனைப் பார்த்தியா?

இல்லை மது அவனுக்கு நைட் ட்யூட்டி முடிச்சிட்டு இப்போதான் ஜஸ்ட் வீட்டுக்குப் போனான்.

ஓ, காட்... ?! இன்னிக்கும் அவரைப் பார்க்க முடியலையே? எப்படியாவது இந்த மேட்டரை கன்வே பண்ணனுமின்னு நினைச்சேன்.

ஏன் நீ காலையிலே பார்க்கலையா?

இல்லையே?

போனில் சொல்ல வேண்டியதுதானே?

ச்சீ... நல்ல விஷயம் நரேன் கிட்டே நேரில்தான் ஷேர் பண்ணிக்கணும்.

பேசாம இன்னைக்கு லீவு போட்டுட்டு போய் பார்த்திட்டு வந்திடேன்.

லீவா மூச்... எத்தனை நாள் கனவு இராப் பகலா கஷ்டப்பட்டு உழைச்சது இதுக்காகத்தானே,,, இப்பபோய் எப்படி லீவு போடறது?

நரேன் கோவிச்சிக்கப் போறான்

ச்சீ... அவன் ரொம்பவும் அட்ஜெஸ்ட்டபுள் டைப் கோவிக்க மாட்டான்.

சரி எங்களுக்கு எல்லாம் பார்ட்டி எப்போ?

இன்னைக்கு நைட் என்று தன் அறைக்குள் நுழைந்தாள் மதுமிதா.

நரேன் பாதி தூக்கத்தில் வந்து எழுப்பியவர்களை சபித்தபடியே கதவைத் திறந்தான். அம்மா நின்றிருந்தாள்.

வாம்மா... எந்த வித சந்தோஷமும் இன்றி தாயை வரவேற்றான் நரேன்.

என்னடா மணி பணிரெண்டாவப் போகுது இன்னமும் கொட்டாவி விட்டுட்டு இருக்கிறே?

நைட்டு வேலையம்மா வா... உட்காரு

சாப்பிட்டியாடா?

ம்.. காலையிலே பிரட் சான்ட்விச்

மதுமிதா எங்கே?

ஆபீஸ்க்குப் போயிருக்கா? நீ ஏதாவது சாப்பிடறீயா

இல்லைடா வர்ற வழியிலே டீயும் பண்ணும் சாப்பிட்டேன்.

சரி போய் படும்மா,,, அப்புறம் ஹோட்டல்ல போய் வாங்கிட்டு வரேன்.

என்னது ஹோட்டல்யா ? வேண்டாம்டா சாமி எனக்கொண்ணும் அலுப்பில்லை, நான் சமைக்கிறேன் நீ போய் படு என்று அடுக்களைக்குள் நுழைந்த அபிராமி திகைத்துதான் போனாள். சலவைக்கல்லில் இழைத்தாற் போன்று இருந்தது அடுப்படி, அத்தனை பவுசு. இங்கனயே படுத்துக்கலாம் போல இருக்கே?! ம்.. நல்லாதான் வைச்சிருக்கா என் மருமவ?! இதென்ன பெட்டிமாதிரி ?

அடுக்களையில் கரண்ட் அடுப்பும், மைக்ரோவேவ் ஓவனும் இருந்தது. இதென்ன சமைக்கட்டில் என்னனென்னவோ இருக்கே? யோசனையோடு போய் மகனை எழுப்பினாள்.

என்னம்மா?

டேய் அடுப்பையேக் காணோம்டா?

என்னம்மா சொல்றே? உறக்கம் கலைந்த எரிச்சலோடு விரைந்தான். அதான் இருக்கே இரண்டுமே. இதுவும் அடுப்புதான்.

கடவுளே இதென்ன டிரங்குப்பெட்டி மாதிரி இருக்கு, இதுலே எனக்கு சமைக்கத் தெரியாது ராசா? காஸ் அடுப்பி இல்லையோ?

இல்லை, உனக்கு சாப்பாடு தானேம்மா வேணும். நான் வாங்கித்தர்றேன். கொஞ்சநேரம் என்னைத் தூங்க விடு,

காலையிலே அவ வேலைக்குப் போனாளே என்ன எடுத்திட்டுப் போனா?

யாருக்குத் தெரியும் எங்கேயாவது கேன்டீனில் சாப்பிட்டுப்பா? நீ போம்மா? என்று மறுபடியும் படுக்கச் செல்ல வயிறு லேசாய் பசித்தது. நேற்று இரவு பீசா சாப்பிட்டது தள்ளும்மா என்று எலக்ட்ரானிக் ஸ்டவ்வை பற்றவைத்து பாதிதண்ணீரைச் சூடு செய்து நூடுல்ஸ்ஸை மாசாலா போட்டு வேககைத்தான். வாம்மா சாப்பிடலாம்.

கிராமத்தில் அரைடவுஸரோட கஞ்சியும், ஊறுகாயும் தொட்டு சாப்பிட்ட மகன் தனக்கு பிஞ்சுக் கைகளால் ஊட்டியதும் நினைவுக்கு வந்தது. இப்போதும் அரை டவுஸர்தான் ஆனால் ஆள்தான் மாறிப்போயிட்டான். முள்ளுக் கரண்டியில் எதையோ சாப்பிடுவதைக் கண்டு, என்னய்யா இத புழு மாதிரியிருக்கு, பார்க்கவே குமட்டுதே? இங்கன வந்து இதையெல்லாமா திண்ணுற?

இது நூடுல்ஸ் மா,,,,! அம்மாவின் செய்கைகளைப் பார்த்தபிறகு, மேற்கொண்டு நரேனால் சாப்பிட முடியவில்லை,

நீ போடா எம் மருமவ வந்ததும் நான் சமைச்சு சாப்பிட்டுக்கிறேன். என்று சொல்லவும், நரேன் மறுபடியும் பெட்ரூம் சென்றான். அதற்குள் அவனின் கைபேசி அழைக்க,

எஸ் ஸார் நான் உடனே வர்றேன் அடுத்த ஐந்து நிமிடத்தில் குளித்து உடைமாற்றிக் கிளம்பிவிட்டான்.

ஏம்பா உடம்புக்கு முடியலைன்னு சொன்னே?

ஆபீஸ்லே கூப்பிடறாங்கம்மா?எப்படி வரமாட்டேன்னு சொல்ல முடியும், அவன் அன்னையின் பதிலுக்குக் கூட காத்திராமல் கிளம்பிவிட்டான்.

ஒரு வருடம் கழித்து பார்க்கிறேன் நல்லாயிருக்கியா என்று கூட மகன் கேட்காதது பெருத்த ஏமாற்றமாய் இருந்தது அபிராமிக்கு! எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தாள். அத்தனை பெரிய வீட்டில் அபிராமி மட்டும தனித்து இருந்தாள். அக்கம் பக்கத்து வீடுகளெலில்லாம் பூட்டு தொங்கியது, இல்லை உள்ளே பூட்டியிருந்தது.யாருக்கும் போன் செய்யவும் தெரியாது. பசிவேறு வயிற்றைக் கிள்ளியது பஸ் ஸ்டாண்டில் வாஙகிய பழங்கங்களை சாப்பிட்டார். வழக்கத்திற்கு மாறாக மதுமிதா அன்று சீக்கிரமாக கிளம்பி வந்துவிட்டாள். மாமியாரைப் பார்த்ததும்

ஆண்ட்டி நீங்க எப்போது வந்தீர்கள்?

சாயந்திரம் நாலு மணிக்கும்மா?!

ஓஹோ.... ஒரு இரண்டு நிமிஷம் நான் ப்ரஷ்யாயிட்டு வரேன். என்று நகர்ந்தவள், கணவனிடம் போனில் பேசினாள். நரேன் உன் மதர் வந்திருக்காங்க நீயேன் எனக்கு இன்பார்ம் பண்ணவேயில்லை, இடியட் எனக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு. இன்னைக்கு நைட் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் பார்ட்டி அலாட் பண்ணியிருக்கேன் உன்னை கூப்பிடலான்னு வந்தா நீயென்னடான்னா எங்கேயிருக்கே?

ஆபீஸில் போன் வந்தது. சரி அம்மாக்கு ஏதாவது தந்திட்டு நீ ஆபீஸ் வந்திடு நாம இரண்டு பேரும் பார்ட்டி என்ஜாய் பண்ணலாம். பட் உடனே கலந்துக்க முடியாது, நடுவில் வந்திடறேன்.

ஓகே...ஓ,கே... என்று குளித்துவிட்டு வேறு உடைக்கு மாறி கையோடு வாங்கிவந்த பிரைடுரைஸையும், பர்கரையும், பெப்ஸி பாட்டிலையும் எடுத்து டைனிங் டேபிளின் மேல் வைத்தாள் வாங்க ஆண்ட்டி சாப்பிடலாம்.

என்னம்மா இன்னமும் சமைக்கவே இல்லையே?

சமையலா,,, அதுக்கெல்லாம் எங்கே ஆண்ட்டி டைம் இருக்கு?! இதைவிட காமெடி என்னன்னு? நானும் நரேனும் நேருக்கு நேராக பார்த்தே ஒரு மாசமாச்சே?!

அது....?! ஏம்மா அவனுக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா?

நத்திங் ஆன்ட்டி ? அவருக்கும் எனக்கும் டூயூட்டி மாறி மாாறி வரும், இப்போ எனக்கு நைட் டூயூட்டி பர்மிஷன் போட்டு வந்திருக்கேன். நைட்டு பார்ட்டி வேற இருக்கு.
உங்கப் பிள்ளை நேரா ஆபீஸீக்கு வந்திடுவார்.

ஏம்மா கேக்குறேன்னு தப்பா நினைக்காதே, இப்படி நீயொரு மூலையிலே அவனொரு மூலையிலே இருக்கவா கலியாணம் செய்து வைத்தேன். இப்படிக் குடித்தனம் நடத்தினா எப்ப
புள்ளக் குட்டின்னு ஆவுறது? சீக்கிரம் நான் சாவறதுக்குள்ளே ஒரு புள்ளையைப் பெத்துக் கொடுத்துடு தாயீ?!

ஓ... ஆன்ட்டி, நீங்க இன்னமும் அந்தக் காலத்திலேயே இருக்கீங்க, கல்யாணம் செய்துகிட்டா உடனே வயித்தைச் சாச்சிகிட்டு இருக்கணுமா? இன்பேக்ட் சாப்பிட ஏன் ஒருத்தருக்கொருத்தர் பார்க்கக் கூட டைமில்லை, எவ்ரிமினிட், நாங்க எல்லாரும் பிஸி? குழந்தை குட்டின்னு சில்லியா பீல் பண்ணமுடியாது. லீவ் இட் திஸ் சாப்படர். கிச்சன்ல பால் பவுடர் இருக்கு. கரைச்சு குடிங்க,
இன்ஸ்டென்ட் சப்பாத்தி பூரி செட் இருக்கு. ஓவனின் வைச்சி சூடு பண்ணி சாப்பிடுங்க, என் பிரண்ட்ஸ் எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க. நானும் உங்க பையனும் நாளைக்கு காலையிலே வர்றோம்.
என்று ஆசையாய் மருமகளின் கையால் சாப்பிடலாம் என்று வந்தவளின் எதிர்ப்பார்ப்பை உணராமல் பறந்தாள் மருமகள்.

பெரிய மாடி வீடு, வீடு முழுக்கச் சில்வர் வெள்ளிப் பாத்திரங்கள், அடுப்படியில் ஊரே படுக்கலாம் போல இருக்கும். மருமக வாயைத் திறந்தா இங்கிலீஷீதான் பேசுவா? ரொம்ப நல்ல போனா அப்படித் தாங்குவா என்றெல்லாம ஊரில் பேசியது நினைவிற்கு வந்தது. வீடு பெரிசுதான். ஆனால் பெற்றவளுக்கு ஒரு வாய் சோறு கூட போக முடியாத அளவுக்கு சிறியது. ரெடிமேடாய் சாப்பிடுபவர்களுக்கு அன்பும், தாய்மையும் ஏன் மனிதம் கூட ரெடிமேடாய் ஆகிவிடும் போல.... என்றெண்ணி நொந்து போன மனதோடு ஊருக்குக் கிளம்பினாள் அபிராமி என்னும் அந்தத்தாய் ,,,, !
07 April 2012

வெள்ளி மலரே...


                                                                  அழகே உனை

ஆராதக்கிறேன்

வெள்ளி மலரால் அணிந்திட்ட

ஆடையை சூடி வரும்

மலை அருவிப் பெண்ணே

இளைப்பாரறிட மல்லிகையின் வாசம்

கோடி சுகம் உன் சாரலில்!

இரைச்சலாய் இசைந்த வீணையின் நாதம்

இளைப்பாரிட கோடி சுகம்

உன் மடி தேடும் கல்லாய் நான்!

தவிப்புகள் தகிக்கிறது,,,,,,,,

இமையோரம் சுடுநீராய்

கன்னப் பேழைக்குள்

முத்துச் சிதறல்கள்

பின்னலின் பின்னே

பின்னிக்கொண்ட

பூச்சரமானேன் நான்

பூவையே உன்

பூத்திருக்கும் புன்னகைக்கு

முன் முட்களும் பஞ்சு

மெத்தையாகிறது.

அதே புன்னகையை நீ

மறுக்கும்போது பஞ்சு

மெத்தையும் முள்ளாகிறது....

நீர் இன்று ஒட்டாமல் தாமரை

தவிக்கிறது

தேடிய இடமெல்லாம் நீர்

இன்றி தாகம் எடுக்கிறது

தாகம் தணிக்க காவிரியாய்

கவிதை நீர் எடுத்து

என் மனவாயிலில்

மயிலிறகான உன்

உணர்வுகளால் கோலமிடு
Powered By Blogger
Powered by Blogger.