உன் மனதை ஆயிரம் மூடிகள் போட்டு நீ மறைத்தாலும், விழிகள் உண்மையைக் காட்டிக் கொடுத்து விடுகிறதே! இமைக்க மறந்த தருணங்கள்! புரிபடாத பார்வைகள் பல நேரம்! காரணம் புரியாமல் தவிக்கிறேன்! அன்றைய தினம் சந்திக்க பயம் கொண்டு, யோசித்தபடி அங்கு இருந்தேன்.

மனதில் ஒரு சிறு நினைப்பு, - நீ வருவாய் என- என் நினைவை நிஜமாக்கிட நீயும் வந்தாய். உள்ளுக்குள் இன்பஊற்று. மெல்லிய பரவசம், தவிப்பாய் உணர்ந்தேன் தருணங்களை. நீயும் பார்வையை வீசினாய், பேசினாய், உள்ளுக்குள் எழுந்துவிட்ட புன்னகையை அடக்கச் சிரமப்பட்டு தலையை அசைத்தேன். நீ போனபின், அதை எண்ணியெண்ணிச் சிரித்தேன். இந்த மாலை வேளையில் உனைக் காணாமல் தவித்தேன். ஒரே விநாடியில் நீ வந்தாய். பசித்திருந்த கண்களுக்கு விருந்தாய்!

வீசிவிட்டுப் போகும் புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கிறதே! மறக்கமுயன்று தோற்றுப்போனதே என் இதயம். முதுகிற்குப் பின்னால் துளைத்தெடுத்த பார்வையில் வாசலில் நின்று வாடிய முகம்தனில் உன் வருகையின் காரணங்கள்… வந்தாய், அழைத்தாய் அதிகாரபூர்வமாய் மெல்லிய உரசல்... ஒரு விநாடி எனினும் மனதினுள் ஆயிரம் நேசத்தை விதைத்தது. உன் விழிகள் என்னிடம் ஏதோ சொல்லுகிறது. அது என்ன உணர்வு? இரவுகளின் தொடக்கத்தில் தனிமையின் பிடிப்பில், போர்வையாய் உன் நினைவுகள்!

என் ஆறறிவிற்குள் நீ அடங்க மறுக்கிறாய்! உனைப் புரிந்துகொள்ள இயலாமல் தவிக்கிறேன் நான்...விரும்பினாய் விழிப்பார்வையால்! விலகிடவே நினைத்தேன் முடியவில்லை, மாட்டிக்கொண்டேன் உன்னில்! பார்வையால் நனைத்தாய்! வார்த்தையால் துவட்டினாய்! பிறகு திடீரென்று உன் மெளனம், பாராமுகம்! ஏன்?

மெளனமான பார்வை, மனதைக் கவரும் சிரிப்பு, தாலாட்டாய் உன் மென்குரல், மறைந்திருந்து பார்த்தாய், எதிர்பாராமல் விழிகளுக்கு முன் வந்து திகைக்க வைத்தாய். பின் பேச மறுத்தாய்? எனைக் கண்டாலே ஒதுக்கினாய், தவித்தேன், துடித்தேன்.

நீ முகம் திருப்பும் நேரமெல்லாம் இறந்துப் பிறந்தேன். தவிப்போடு உனைக் கடந்து போகும் நேரங்களில் வலுக்கட்டாயமாய் என் புறம் திரும்பாமல் இருப்பாய். இருளைப் போர்த்திக் கொண்டு ஒளியில் மறைந்தாய்! ஆனால், மறுபடியும் திடீரென்று உன்னிடம் மாற்றம். இதற்கென்ன காரணம், முன்பைவிடவும் கூர்மையாய் நேராய் எனை நோக்குகிறாய். இமைகளை வருடும் உன் பார்வையைச் சந்திக்கும் நேரம் புன்னகையைக் கூட மறந்து விடுகிறேன் நான்! விரல்களை உரசுகிறாய், ஒருமுறையெனின் பதட்டம் என்று எடுத்துக்கொள்வேன். ஆனால், பலமுறை விரல்களை வருடும் அந்த மென்மையான வருடலில் உடல் சிலிர்க்கிறது.

நீ பேசாதிருந்ததைவிட இப்போதே இன்ப அவஸ்தையாய்! எங்கிருக்கிறாய்? நான் தவிக்கிறேன் உனைப் புரிந்துகொள்ள முடியாதபடி! ஏன் எனக்கிந்த அவஸ்தை? நான் உன் தோற்றத்தில் மயங்கவில்லை, ஏதோவொரு உணர்வு, உனைக் காணும் நேரம் இமையென்னும் மாளிகைக்குள் புகுந்து விழிப்படுக்கையில் வீழ்த்திவிடுகிறாய்! உன் மாற்றம் திகைக்க வைக்கிறது, தேனில் ஊறிய பலாச்சுளையாய் இனிக்கிறது. போதையேறிய பார்வையில் பூக்கிறேன் தினமும்!
-------------------------------------------------------------------------------
                                                    நினைவுகள் தொடரும்.

0 comments:

Powered By Blogger
Powered by Blogger.