கண்ணீரின் சுவடுகள் கன்னப்பாதையில்! கவலையின் சுவடுகள் இதயப்பாதையில்! நாட்கள் நகர்ந்தாலும் நினைவின் ஓரம் நெஞ்சைப் பிழிவதைப்போல் என் மனமெங்கும் இன்பத்தினை விதைக்கத்தான் உனை நினைத்தேன். வெற்றுப்பக்கமாய் இருந்த மனம் ஒரு முழு நீள ஓவியமாய் உன் முகத்தை நிறைத்திருந்தது.
மனதை அழுத்திய சுமைகள் உனைக் கண்டதும் சற்றே மறைந்தது. நான் உனைக் காணத் துடிக்கிறேன். நீ ஒரு புரியாத ஓவியம். நேசிப்பினை விழிகள் சொல்கிறது. வார்த்தைகள் வெறுப்பினைக் கொட்டுகிறது. தவிப்பாய் காத்திருக்கிறாய். அருகில் வந்ததும் அனலாய்த் திரும்புகிறாய். உன் மனதில் எழும் எண்ணங்களை என்னால் உணரவே முடியவில்லை. ஆசையாய் காதலாய் வருடிய விழிகளே, உனக்கு என்ன ஆனது? இனிய கற்பனையை இதயத்திற்குள் விதைத்தவனே, மீண்டும் உன் கதவடைப்பினைத் தாங்கும் சக்தி இல்லை என்னிடம்! எத்தனை முத்தங்கள் உயிர்ப்பூட்டைத் திறந்து என்னை முழுவதுமாய் எடுத்துக்கொள்ள நீ தந்த பரிசுகள்.
உன் நினைவின் தாக்கம், நிலவிலும், வானிலும், மின்னும் ஒளியாய், நீ என்னால் பிரகாசிக்கிறாய். உன் நினைவுப் புள்ளிகளை ஒன்றாய் இட்டு என் எண்ணங்களால் அதை ஒன்று சேர்க்கத் தோன்றியது உன் அழகிய உருவம்! இருள் படர்ந்த வானில் ஆங்காங்கே வெண்திட்டுக்களாய் மேகங்கள்! அலையலையாய் பொங்கும் உன் நினைவுகளே உருவமெடுத்தாற்போல் ஓர் எண்ணம்! மணப்பெண்ணாய் புத்தொளி வீசி பூர்ணமாய் ஆடையில்லா அழகிய நிலவு!
அதில் நீயும் நானும்... உலகை மறந்து, உணர்வுகளைத் துறந்து நம் இருவர் கைகளும் ஒன்றோடு ஒன்று கட்டுண்டு இருக்கிறது. எண்ணப் படிக்கட்டுகள் மெல்ல மெல்ல விரிந்து, இதய மாளிகைக்குள் எனை அழைக்கிறாய். சில்லென்ற ஊதக்காற்று உன் வாசம் மூலமாய் நீ வந்துவிட்டுப் போனதை உணர்த்திட, பூஞ்சாரலாய் மழைத்தூறலில் நனைகிறேன் நான்! எங்கே நீ, விநாடிகளாய் விரயமாகும் தருணங்களைத் தரப்போகிறாய் என்பதை அறிவிக்கத்தான் இதமான உன் அணைப்பைத் தந்தாயா? உடைந்த இதயம் உன்னைத் தொலைத்துவிட்டேன் என்று இரத்த அழுகையில் கண்ணீர் பொழிவது உணர முடியவில்லையா?
ஒவ்வொரு விடியலிலும் உனைக்கண்டேன் என் கனவில்! ஒவ்வொரு இரவும் மூடிய விழிகளுக்குள் உருவமாய் நீ வருவாய் என் நினைவில்! என்ன என் இதயம் தங்கமாய் ஜொலிக்கிறது. நீ அதில் இருப்பதனாலா? நீ காதலை உணர்த்தினாய் உன் விழிகளில்! ஆசையை உணர்த்தினாய் வருடலில்! அன்பை உணர்த்தினாய் உன் அணைப்பில்!
ஊமையாய் அழுகின்றன விழிகள். சிந்திக்க மனமற்று மறதியை மகிழ்வாய் ஏற்றுக்கொள்கிறது மூளை. உன் நினைவென்னும் போர்வையில், உறங்கிக் கிடக்கவே இதயம் ஏங்குகிறது. பாறையாய் இருகிக் கிடந்த இதயத்தை இளக்கினாய், உன் உதடு விரிக்காத புன்னகையால்! குடையாய் வளைந்திருக்கும் இமைக்குள் மழையாய் உன் நினைவலைகள். எண்ணற்ற எண்ணக் கடலுக்குள் கப்பலாய் நங்கூரமிட்டாய். ஒவ்வொரு நொடியையும் உனை எண்ணியே கழிக்க வைத்தாய்.
காயங்களில் கதறிய இதயத்தை வார்த்தைகளின் சூட்டினால் ஆறுதல்படுத்தினாய். இன்று நீயே காயப்படுத்தலாமா? எத்தனை எண்ணங்களைப் பரிமாறிக்கொண்டோம். உன் விழிகள் எனைத் தொட்டுப் போகும்போதெல்லாம் எழுப்பிச்சென்ற கேள்விகளுக்கு விடை தெரிவிக்கவே இந்த மெளனமா? உனை மறக்கத்தான் முயல்கிறேன்... ஆனால், முன்பைவிடவும் அதிகமாய் நெஞ்சுக்கூட்டிற்குள் ஒட்டிக்கொள்கிறாய். ஏன் இந்த மாற்றம்? உன்னில் மேலும் நினைவுகள் தொடரும்...
----------------------------------------நினைவுகள் தொடரும்------------------
அன்புடன் லதாசரவணன்.



