நான் உன் தோற்றத்தில் மயங்கவில்லை, ஏதோவொரு உணர்வு, உனைக் காணும் நேரம் இமையென்னும் மாளிகைக்குள் புகுந்து விழிப்படுக்கையில் வீழ்த்திவிடுகிறாய்! உன் மாற்றம் திகைக்க வைக்கிறது, தேனில் ஊறிய பலாச்சுளையாய் இனிக்கிறது. போதையேறிய பார்வையில் பூக்கிறேன் தினமும்!
உன் வருகைக்காய் என் வாசல் ஏங்குகிறது... பனிமலராய் நான்! பார்வையால் நனைத்தாய், அழைத்தேன். வந்ததும் ஆசைதீர விழிகளாலே பருகினாய்! மெளனத்திற்குத்தான் எத்தனை சக்தி ! உதடுகளைப் பிரிக்காமல் உன் கண்களின் மொழி! தயக்கம் ஏன்? உன் சொற்களைக் கேட்கவே நான் காத்திருக்கிறேன் இதழ்களின் பூட்டை விலக்கலாமே ! பரிசென நான் அளித்ததை வாங்காமல் எனையே பார்த்ததேன்? பேசத் துடித்த உதடுகள், தாகம் நிறைந்த கண்கள், ஏக்கம் வழிந்த உன் பார்வை- இவையெல்லாம் சந்தித்த பிறகு என் சிந்தனையே மறந்து போனதேன்?
நீ விழிகளால் உறவாடியது சில மணித்துளிகள்தான். ஆனால், பல்லாயிரம் தருணங்களில் அதை நினைக்க வைத்துவிட்டாயே! எங்கு திரும்பினாலும் நீயே இருப்பதாய் ஒரு நினைவு... உறங்கிட முயன்றால் இமைகளுக்கு நடுவில் வந்து நிற்கிறாய்! ஏக்கம் பொழிந்த பார்வை, தயங்கிய நடை, ஏனிது? நான் உன்னவள் இல்லையா? நான் கேட்டு ரசித்த அனைத்து வரிகளும் உனைப் பார்த்ததும் மெய்யாய்ப் போனதாய் உணர்வு! உனைக் கடந்து போகும் போதெல்லாம் ஏதாவது பேசவேண்டும் என்று மனம் ஏங்கும். ஆனால், விழிகளில் நுழைந்து இதயத்தைத் துளைக்கும் அந்தப் பார்வையில் சகலமும் மறந்துவிடும்.
விநாடிகளைக்கூட கடக்கச் சிரமப்படுகிறேன். என் ரசனைகள் அனைத்தும் உன்னில் காண்கிறேன். என் விரல்களை அணைத்த உன் விரல்கள் உறவாடியபோது மென்மையாய், பூப்போல என் விரல்களைத் தொட்டு உன் உதடுகளுக்கு அருகில் நீ எடுத்துச்செல்ல, இதென்ன உணர்வு, உன் தொடுதலில் இத்தனை இதமா? உனைச் சந்திக்க இயலாமல் தரை தாழ்ந்தன விழிகள். மொத்த சக்தியும் வடிந்து போனாற்போல் தளர்ந்தது உடல். வெட்கம் நெட்டித்தள்ள மனமின்றி பிரித்தேன் என் விரல்களை உன்னிடமிருந்து!
ஏக்கமாய் வேண்டுமென்பதைப்போல் உன் விரல் நீண்டுவர, போதுமென்ற என் கெஞ்சலில் பிரிந்தாய், மனமின்றி திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே! நாட்கள் சில ஆனாலும், நினைவுகள் மட்டும் நெஞ்சில் பசுமையாய்! என்னையும் அறியாமல் நான் உன்னில் விழுந்துவிட்டேன். உன் அணைப்பிற்கும், அண்மைக்கும், முத்தத்திற்கும் ஏங்குகிறது என் மனம்! நீ மறுபடியும் எனை விட்டுப் பிரிந்துவிடுவாயோ என்று தவிக்கிறது இதயம்!
ஒரே நினைவுத் தூறலில் நனைகிறோம் நாம், ரசனைகள் மட்டுமல்ல ரகசியங்களும் ஒத்திருக்கின்றன - உனக்கும் எனக்கும்! உன் வருகையை எதிர்பார்த்தேன் அதிகாலையிலேயே! ஏனோ நெஞ்சிற்குள் இனம்புரியா குறுகுறுப்பு. வருகிறேன் என்று நீ உறுதியளிக்கும் வரையில் படபடத்த இதயம் தலையசைப்பில் பட்டுச் சிறகை விரித்துக்கொண்டது. வரப்போகும் அந்தச் சில மணித்துளிகளுக்காகவே காத்திருக்கிறேன், கடக்கிறேன் நிமிடங்களை!
வந்தாய் விழிக்கூண்டிற்குள் எனைச் சிறைப்பிடித்து விட்டாய்... பதைபதைக்க பார்வை வலை விரித்தாய் விழுந்துவிட்டேன் அதில். இருளும் ஒளியும் இணைந்திருந்த நேரம் வானவீதியில் வெண்பளிங்கு மேகத்தில் நீயும் நானும் சஞ்சரிக்கிறோம்! உனை நேரில் காணாநேரம் ஆயிரம் வார்த்தைகளை உச்சரிக்கும் இந்த உதடுகள் நீ அருகில் இருக்கும்நேரம் அரைவார்த்தை பேசக்கூடத் தயங்குகிறது. எதையோ கேட்க எண்ணி அருகில் வந்தேன். விநாடிக்கும் குறைவான நேரத்தில் என் கரங்களைப் பற்றினாய். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போலொரு உணர்வு. இடை பற்றி இழுத்தணைத்து நெஞ்சின் சூடுறைத்த நேரம்... என் இதழ்களை நோக்கி நீ குனிய, பதறிப்போய் நான் விலக, விரல்களால் உடலில் ஏதோ தேடினாய்! உன் துணிவு கண்டு எனக்குள் வியப்பு! விலகி நின்றேன். தலைசாய்த்துப் பார்த்து கரம் நீட்டினாய். உன்னிடம் போகத்துடித்த நீட்டிய கரங்களைப் பற்றத் துடித்த என் இரு கைகளையும் கட்டிக்கொண்டேன்.
சிறு மெளனப்போராட்டம் நம்மிடையே! குனிந்திருந்த முகத்தை விரல்கொண்டு நிமிர்த்தினாய். அடுத்த நொடியில் உன் பிடியில் நான்! என் கைகள் உன்னில் பாதுகாப்பாய். எப்படி அவை உனைச் சேர்ந்தன? நீ உறுதியானவன் என அறிவேன். ஆனால், உன் அணைப்பிலும் தொடுதலிலும் அத்தனை மென்மை. மேகம் தொடுவது போல், குழந்தையை வலிக்காமல் பற்றுவது போல், கனவுலகத்தில் இருப்பது போல் பிரமையெனக்கு.
ஏதோவொரு மயக்கம் எனை ஆட்கொண்டுவிட்டது. மறந்தேன் சகலமும். இந்த அணைப்பிற்காகவே ஏங்கியது மனம். அகப்பட்டுவிட்டேன் அதில்! நான் நினைத்தது நிகழ்ந்தேவிட்டது. உன் இனிய முத்தம் வேகமாய் வந்தடைந்த இதழ்களால், என் இதழ்களை நனைத்துவிட்டுப் பிரிந்தது. அப்பிரிவு தாளாமல் மீண்டும் இணைந்தாய்! மனதினுள் மீண்டும் மகிழ்ச்சிப்பூக்கள்.
வெட்கம் தாளாமல் உனைத் தள்ளிவிட்டு விலகினேன். நான் நேசித்த விழிகள் கொஞ்சின. வா....என்னும் ஒற்றைச்சொல் காற்றாய் மிதந்து போதையோடு வர, மறுப்பெனத் தலையசைத்தாலும், என் கால்கள் தன்னிச்சையாய் நகர்ந்தன உன்னிடம். மீண்டும் உன் அணைப்பில் கட்டுண்டேன். இதழ்களால் இதயத்தைக் குடித்தாய்! எனை வெட்கம் பிடுங்கித்தின்றது. உன் பின்னால் நின்றுகொள்ள... அந்த நெடிய கரங்கள் நீண்டு பின்புறமாய் அணைத்துக்கொண்டன. சென்று பின் திரும்பிவந்தாய். மீண்டும் இடையைப் பற்றி அணைத்துக்கொண்டாய். இது பிரிவை உணர்த்திய அணைப்பு. உன் உதடுகள், முகத்திலும் தோள்களிலும் கழுத்திலும் ஒரு முழு நிமிட அணைப்பிற்குப் பின் எனை விட்டுப் பிரிந்தாய். சென்று மறைந்தாய்!
உன் விழிகளின் அணைப்பில் மிதந்தவளை விரல்களின் அணைப்பில் மூழ்கிடச் செய்தாய்! இனி எழுவது கடினம். நான் உன்னில் முழுமையாய் விழுந்துவிட்டேன். உன் ஒரு நொடி பிரிவினையைக்கூட ஏற்க முடியாது. அன்பே என் கனவிலும் உன் முகம் தேடுவேன். உனது காதலில் விழுந்துவிட்டேன்! வாழ்வின் ஒவ்வொரு வாசலும் இன்பத்தைத் தருவதில்லை. கடந்துவந்த பாதையின் கசப்பான நினைவுகளை மறக்கத்தான் முயல்கிறேன். விரக்தியும் வேதனையும் மனதைப்போட்டு வதைக்கின்றன.
-------------------------------------------------------------------------------
நினைவுகள் தொடரும்.


0 comments:
Post a Comment