30 December 2011

கவரிமான்......

தூறிய மழைக்குப் பயந்து நைந்து போன சேலையை இறுகத் தலையைச் சுற்றியபடி வந்தாள் பொன்னுத்தாயி !கதவென்று பெயருக்கு வைக்கப்பட்டு இருந்த தட்டியைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தாள். மகன் கதிரேசன் சாயம் இழந்த சுவரில் சாய்ந்தபடி படித்துக் கொண்டிருந்தான். பழக்கூடையை ஓரமாய் வைத்துவிட்டு அடுக்களைக்குள் சென்றாள். பசி வயிற்றைக் கிள்ள, பாத்திரங்களை எடுக்கும் போதுதான், மகன் இன்னமும் சாப்பிடவில்லை என்பதை தெரிந்தது. ஏலே ! கதிரு, மணி பத்தாவப் போகுது,

அவனிடம் மெளனம், ஆனால் மிக மெல்லியதாய் விசும்பல் ஒலி கேட்கவும் விதிர் விதிர்த்துப் போய் மகனிடம் நின்றாள். பணம் கட்ட இன்னும் மூணுநாள் தான் இருக்கு, நீ இதுவரையில் பணம் தரலை, எல்லாரும் கிண்டல் பண்றாங்க, எனக்கு அவமானமா இருக்கு!

எம்புட்டு பணமின்னுசொன்னே?

ஆயிரம் ரூபாய் !

இரண்டு மாசத்துக்கு முன்னாடிதானே நான் எண்ணூறு ரூவா தந்தேன்,

அது வேற இது வேற.,

அய்யா நானென்ன அரசாங்க உத்தியோகமா பாக்குறேன். தெருத்தெருவா பழம் விக்கிறேன். வர்ற காசு வாய்க்கும் வயித்துக்குமே பத்தாமப் போனாலும், கடன் பட்டாவது உன்னைப் படிக்க வைக்கிறேன், அடிக்கடி இப்படி பணம் கேட்டா எப்படிப்பா?

அப்போ என்னையேன் கல்லூரியில் படிக்க வைச்சே. உன்னை மாதிரியே கறிகா விக்க வைச்சிருக்கலாமே ?! மகனின் அந்தக் கேள்வியில் ரொம்பவே மனமுடைந்து போனாள் பொன்னுத்தாயி !

என்னய்யா, நீயே இப்படிப் பேசறே? உங்கப்பன் நம்மை விட்டுட்டுப் போன பொறவு நான் உன்னைப் படிக்க வைக்க வளர்க்க, என் தோலைச் செருப்பா தைச்சுப் போடுறேனே! அது உனக்குப் புரியலையாய்யா?

அதுக்கு நீ என்னை இத்தனை பெரிய கல்லூரியிலே சேர்த்து இருக்கப்படாது, என் வயசுப் பசங்களெல்லாம் நல்லா துணிமணி உடுத்திட்டு வர்றாங்க. நானென்ன அதெல்லாம் கேட்டு உன்னைத் தொந்தரவு செய்யறேனா?

கோவிக்காதேய்யா ! நானென்னத்தைக் கண்டேன்,இன்னும் இரண்டு நாள் பொறுத்துக்கோ, சண்முக அய்யாகிட்டே கேட்டுப் பாக்கிறேன். இப்போ சாப்பிடவாய்யா, என்றாள் மகனின் மோவாயைத் தாங்கியபடி,

எனக்கு வேண்டாம் நீயே போய்ச் சாப்பிடு,! அவன் திரும்பிப் படுத்துவிட்டான். மனம் பதைத்தது, பிள்ளையே சாப்பிடலையே, பசியால் கொதித்? வயிறைத் தண்ணீர் ஊற்றி அணைத்தாள். இந்தப் பணத்திற்கு என்ன வழி என்று மனம் புலம்பியது, கணவன் இறந்த பிறகு, இந்தப் பிள்ளையை வளர்த்துப் படிக்க வைப்பதற்குள் விழி பிதுங்கத்தான் செய்தது. ஏழ்மையில் பிறந்து வளர்ந்தவள் என்பதால் ஆண்பிள்ளை இல்லாமல் போனாலும் பயமின்றி வாழ்வு சீராய் ஓடிக் கொண்டு இருந்தது. பொன்னுத்தாயின் இலட்சியமே கதிரேசனைப் படிக்க வைப்பதுதான். பொழுது விடியும் வரை இமை மூடாமல் யோசித்தவள் காலையில் முதல் வேலையாய்ச் சண்முகத்தைச் சந்திக்க சென்றாள்.

என்ன பொன்னுத்தாயீ ! உனக்குத் தெரியாதா? இது மாசக்கடைசி நானென்ன செய்ய முடியும்? நீயும் ரொம்பவும் அவசரமின்னு வேற சொல்றே.. ஒரு வழியிருக்கு. ஆனா நீ ஒத்துப்பியான்னு...? அவர் சந்தேகமாய் இழுக்க,

நீங்க இருங்க சித்தப்பா, நான் சொல்றேன். என்று ஒரு இளைஞன் முன்னால் வந்தான்.

அம்மா எங்க கல்லூரியிலேயே ஒரு ஓவியப் போட்டி இருக்கு, இந்தியாவின் வறுமைக் கோடுங்கிற தலைப்பில் சில படங்கள் வரையணும். அதுக்கு படத்தின் மாதிரியா நீங்க வரமுடியுமா? என்று கேள்வியெழுப்பினான். உங்களுக்கு 1000 ரூவா கிடைக்கும். நான் ஏற்பாடு பண்றேன்.

நன்றி தம்பி ! நான் என் உயிரைத் தரவும் சித்தமாய் இருக்கிறேன். என்றாள். நைந்து, கிழிந்து போன புடவை, சல்லடையாய் ரவிக்கை, ஏறக்குறைய முக்கால் நிர்வாணமாய் நிற்க வேண்டும் என்றதும், உயிரே போவது போலிருந்தது பொன்னுத்தாய்க்கு !

என்ன சாமி இது? இங்கே இருக்கிறே பிள்ளைகளுக்கு எம்மவன் வயசுதான் இருக்கும். அதுங்க முன்னாடி போய்...! வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள அழுதாள். கண்கள் அருவியைக் கொட்டின. பொன்னுத்தாயை அழைத்து வந்த இளைஞன் முன் வந்தான். அம்மா ! நாங்களும் உங்களை அம்மாவைப் போல்தான் நினைக்கிறோம். தவறான நோக்கு ஏதும் இல்லைம்மா, உங்கள் தேவைக்கு இதில் பணமும் கிடைக்கிறதல்லவா ?

பணம்..! கதிரேசனின் சாப்பிடாத கவலை தோய்ந்த முகம் ஒருமுறை கண்ணின் முன் வந்து போனது. சரியென்று தலையசைத்தாள். உணர்ச்சியற்ற அந்த முகம் தனை ஓவியத்தில் உணர்வுகளாகக் கொண்டு வந்தனர்.

கதிரேசனின் கையில் நூறு ரூபாய் நோட்டுகள் பளபளத்தன. அம்மான்னா அம்மாதான். சரிம்மா வர்றேன்! பிள்ளையின் முகமலர்ச்சிக்கு முன் தான் பட்ட வேதனை அனைத்தும் கரைந்து போனது பொன்னுத்தாய்க்கு! ஒரு வயதிற்குப் பிறகு பெற்ற தாயைக்கூடப் பார்க்க அனுமதிக்காத உடல், சற்றே துணி விலகிப்போனாலும் அதை பதறி மூடும் நெஞ்சம். அதை இன்று...! அதற்கு மேல் நினைப்பதே நெருப்பில் குளிப்பது போல இருந்தது. அனலான மனதை அடக்க வழியின்றி அமைதியாய் சரிந்து போனாள்,

கதிரேசன் நண்பன் சிவாவின் வீட்டின் முன் நின்றான். டேய் சிவா, என்னடா பண்ணிகிட்டு இருக்கே ?

கல்லூரியில் விழாவிற்காக ஓவியம் வரைஞ்சேன். எதிர்ப்பார்த்ததை விடவும் அற்புதமா அமைஞ்சு இருக்கு. நீயெங்கடா போயிட்டு வர்றே?

நம்ம ஆளு ப்ரியாவிற்கு இன்றைக்குப் பிறந்த நாள் இல்லையா? அவளுக்கு அசத்தலா ஒரு பரிசு தரலான்னு நினைச்சேன். பரிசு, விருந்துன்னு நல்லா சந்தோஷமாயிருந்து வர்றேன். இங்கே பாரு. காதலுடன் ப்ரியான்னு கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்காப் பாரு ! வழுவழுப்பான வாழ்த்து அட்டை ஒன்றைக் காண்பித்தான்.

டேய் பாவி, இதுக்கெல்லாம் உனக்குப் பணம் ஏதுடா?

எங்கம்மாகிட்டே பணம் வேணுமின்னு அழுதுகிட்டே கேட்டேன். ராத்திரி சாப்பிடாம படுத்திட்டேன். மறுநாளே பணம் கிடைச்சிட்டது.

பாவம்டா அவங்க ! என்ன கஷ்டப்படாறாங்களோ? இப்போ இது தேவையா ?

டேய் சிவா ! சில விஷயங்களைக் கிடைக்கும்போதே அனுபவிச்சிடணும்,

சரி இந்தப் படத்தைப் பாரேன். சிவா காட்டிய திரையில் அழுக்காய் நைந்து போன பழைய கிழிசல் உடையில் பாதி உடல் தெரிய, கலைந்த தலையும் சோகம் அப்பிய கண்ணுமாய்...!

பாவம்டா,,, என்ன அவசரத் தேவையோ? பணம் வேணுமின்னு இப்படி போஸ் தந்தாங்க. ஆனா நம்ம பிரண்ட்ஸ் முன்னாடி நிற்க அவங்க பட்ட பாடு! சிவாவின் எந்தப் பேச்சும் கதிரேசனின் காதில் விழவில்லை, அம்மா! என்னும் அலறலோடு வீடு நோக்கி ஓடினான் அவன்.

ச்சே ! எத்தனை கேவலமான மனிதன் நான். அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். எனக்காக எத்தனை பெரிய தியாகம் செய்து விட்டீர்கள்.

வீட்டின் முன் ஓரே கூட்டம். என்ன என்னவென்று மனம் பதைத்தது. பக்கத்து வீட்டு அஞ்சலை இவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். தம்பி ! உங்கம்மா போய்ச் சேர்ந்திட்டா அய்யா !
உன்னை அநாதையா விட்டுட்டு ! என்றாள்.

கிடத்தப்பட்ட தாயின் சடலத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்தான். அந்த முகத்தில் தெரிந்த அமைதியே அவனைச் சுட்டது. நீ கவரிமான் ஜாதியம்மா. மகன் பொருட்டு உயிரை விட்டு விட்டாயே ?! ஆனால் நான்... அல்ப சந்தோஷத்திற்காக உனை ஏமாற்றி விட்டேனே ! அதற்காகத்தான் இனிமேல் இவனுடன் இருக்கக் கூடாதென்று போய்விட்டாயோ ! முதன் முதலாய்த் தாய் மீது உள்ள உண்மையான பாசம் வெளிப்பட, அம்மா என்று அழுதான் - பெருங்குரலெடுத்து !

----------------------------------------------------
லதாசரவணன்..........................
தோழமையின் தோழியே
நட்புச்சிறகுக்குள் எங்களை அடைகாத்து
சுவாசம் என்னும் தோளில் சுமந்து,
அச்சுமையையே சுகமாய் நேசிப்பவேளே

புத்தொளி தரும் உன் புன்னகைக்குள் எத்தனையோ
பொன்மணிகள் புதைந்திருக்கிறது.
மனத் துயரை துடைக்கும் வலிமை அதற்குண்டு

பட்டாசு பேச்சும், பகட்டில்லாத குணமும்
ததும்பி வழியும் அமுதசுரபி நீ

தோள் சாய தோள் கொடுத்தாய்
என் ஜன்னல் கம்பிகளுக்கு நடுவில்
வெண்ணிலவாய் வந்து தாலாட்டி விடுகிறாய்

இன்னொரு அன்னையாய மாறி சோறுட்டுகிறாய்

மனம் நோகும் நேரம் கனிவும், மகிழும் நேரம் பூரிப்பும், துவளும் நேரம் நெஞ்சுரமும் தந்து, கண்ணாடியின் பிம்பம் ஆகிறாய்...

என் நிழலாய் தொடர்ந்து, என் வெற்றியை பாராட்டி
சோம்பலை சீராக்கி, நித்தம் சாதனை படைக்க துணை நின்றவளே

என்றுமே உன் நட்பின் கதகதப்பில் கட்டுண்டு இருக்வே
விரும்புகிறோம்.....

இன்றல்ல இனிவரும் நாளிலும் நித்யமாய் ஆதவனைப் போலவே, உன் வாழ்வு ஒளி பெருகி, சந்திரனாய் குளிர்ந்த,நதியாய் ஆனந்தம் பெருக்கெடுத்து நீ வாழ, என் வாழ்த்துக்களோடு , பிராத்தனைகளும்....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி.........



காதலியே நான் உனைத்தேடுகின்றேன்
நீ என் மனைவியானபிறகு…..
பார்வைப் பரிமாற்றங்கள் நிகழ்ந்த போதும்
நேசித்த விழிகளில் வழிந்த பாசத்தையும்…
என் காதலை நான் தவிப்பாய் சொன்ன போது
என்னிடமும் உன் பரிமாற்றம் இருந்த்து
என்று வெட்கமாய் நீ ,,,
சாலையோர மரங்களில் சாய்ந்தபடி
மலர்களின் வாசத்தோடு உன்
பெண்மையின் வாசத்தை நுகர்ந்த்தும்…
சாலை நனைக்கும்
நீரை தொட்டுவிட கொஞ்சி
கொஞ்சி விளையாட உன்
கொலுசுப் பாதங்களில் என்
நிழலை அடக்கியதும்,,,
படகின் முதுகில் மணிநேரங்கள் சாய்ந்திருந்து,
பல கதைகள் பேசியதும் உன் மடி
மீது தலைசாய்த்து நின்
வெண்டை விரல்களினால் நீ என் கேசம்
கோதிய போதும் சரணைந்தேனே உனை,,,,,
மஞ்சள் பூசி மல்லிகை வைத்து
பட்டுடுத்தி என் கைகள்
மங்கல நாணைப் பூட்டிட நீ குலுங்கிச்
சிரித்து கண்களில் நீரைக் கொட்டியபோது
கரைந்தேன் அந்த விழி நீரில்,,,,,,
மங்கிய விளக்கொளியில் மன்மதனின் அரவணைப்பில்
பொங்கிய மோகத்தை வழித்தெடுத்து
வைக்கும் பளிங்குக் கிண்ணமாய் நீ
ஜொலித்த போதும்…..
தேனிலவாய் தினமும் தித்தித்த
இரவுகளை கணக்கிட்டு பூ
நிலவென உன்னோடு ஒட்டி உறவாடிய தினங்களும்,,,
அன்று பொருட்காட்சியில் நீ பயம் கொண்டு
மிரண்டு அணைத்து உடலோடு உடலாக
ஒட்டிய தருணங்களிலும்,,,,,
வேர்வைக் களிப்பில் மேடிட்ட வயிரோடு
இடுப்பினைக் காவல் காத்த முந்தாணையில் என்
முகம் துடைத்த்தையும்….

அள்ளி மகிழ கொஞ்சி விளையாடிட என்
பிரதியாய் பிள்ளையை தந்த போதிலும்
என் அன்னையை உணர்ந்தேன் உன்னால்-?
நாட்கள் மலர்ந்து உதிர்ந்தன…
நரை பூத்திருந்த்து நம் பிறை ஓரங்களில்
இரு பிள்ளைகளை ஈன்ற தாயாய்,
சகோதரியாய், மருமகளாய் என
உன்னுள் பல அவதாரங்கள் இதில்
உன்னிலே உன்னைத் தேடுகிறேன்,
மனைவியான பின்னால் காதலியாக்கிட
காதலியாக்கிட ஏங்குகிறது நெஞ்சம்…
என் பழைய காதலியைக் காதலாய் காண…..

சுவரொட்டி



நான் சாலையோர சுவர் பேசுகிறேன்
இரவானாலும் , பகலானாலும் சரி
எனக்கு ஓய்வோ உறக்கமோ கிடையாது,

ஒவ்வொரு மனிதனின்
அழுக்கு கூறும் முதுகைப்போல்!
அதே சாலை என்னும் ஜீவனின்
முதுகாய் வாழும் என்னிடம்
எல்லா அழுக்குகளும் மண்டிக்கிடக்கிறது!

நித்தம் செடி பிரசவிக்கும் மலர்களில்
சில பகவானுக்கும், பாதைகளுக்கும் போகும்.
ஆனால், நானோ என்னுள்ளே
கடவுளையும், காமத்தையும் புதைக்கிறேன்.
சுவரொட்டியெனும் பெயரில் !

பகலில் ஒட்டிய ஆடையை
இரவில் நிர்வாணமாக்கி யாரோ
அவன் கோந்தென்னும் பெயரில்
என் உடலைத் தடவுகிறான் !
வேசியாய் நான் உணருகிறேன் !
அத்தருணத்தில் நான்!

மெழுகி பூசி ! ஆடையென நீலவண்ண
ஆடையென சுவரொட்டியை அணிவித்து,
அலங்காரம் செய்கிறான்!

பகல் விழிக்கும் நேரம்
மணப்பெண்ணாய் புது ஆடையோடு
நிற்கிறேன் நான்!

சிலர் ரசிப்பார் சிலர் ருசிப்பார்
குறுகுறுவென்று பார்த்திட்டு,
சுகமாய்ச் சாய்ந்து கொள்வார்கள்
என் மடியில் !

இதோ குளிர் நீர் அடித்து
கோலமிடுவதைப் போல்
வண்ணம் தீட்டுகிறான்.
புதிய வர்ணத்தின் வாசனை!
வண்ணங்கள் வாரித் தெரித்த
பூக்களாகிறேன்!

இன்றே அணிகிறேன்
நாளை அவிழ்க்க?!

என்னை விரும்புவோரும் உண்டு
வெறுப்போரும் உண்டு என்-
அழகிய முகத்தினை ஆசையாய்
வருடவும் செய்வர் !
நாட்கணக்கில் சிறுவரென அதில்
ஏறி சவாரியும் செய்வர் !

அம்மன் படமெனில்
கையெடுத்துக் கும்பிட்டும்
ஆசைப்படமெனில் அருகில் வந்து
வருடியும் பலரென்னை மதிப்பர். !

என் உடல் சில நேரங்களில்
வதையும் படும்!
பிடிக்காத அலைகளை
சுமக்கின்ற கடலைப் போல
ஒவ்வாத எத்தனையோ
காகிதங்களைச் சுமந்திருக்கிறேன்!
வேலை காலியில்லை என்னும்-
வாசகம் சுமந்த பொதி
கழுதையாய் போனேன்!

அடிமுட்டாளாம் அவனின்
இயற்கை ஓட்டம் தணிக்கும்
கழிப்பிடமாய் ஆனேன்! 
எச்சில்களை சுமந்த குப்பைத்தொட்டியானேன்?!

இறைவா என்ன தவறு இழைத்தேன்
என்று எனக்கிந்த தண்டனை

ஏ! பொது நல அமைப்புகளே?
சித்திரங்களுக்கு குரல் தரும்
நீங்கள்
சுவர்களுக்கும் குரல் தாருங்கள்.?!

இருளென்னும் பேய் அரக்கனை அடக்கி
வெளிச்ச வெடிகள் பூத்தது
பாதையெங்கும் மின் ஒளிகள்
பார்வையெங்கும் வண்ண மின்னல்கள்

நிலவொளியில் பூண்டு, காடாவைத் துறந்து,
மின்னும் மின்சார விளக்கு வந்தது.
இன்று விளக்குண்டு மின்சாரமில்லை
மீண்டும் நிலவொளிக்கே செல்கிறோம் நாம்......

பஞ்சம் பிழைக்க பாதசாரியாய் வாழ்ந்து
பகுத்தறிவினுள் நுழைந்து, வாகனம் ஈன்று
இருக்கையென்னும் தொட்டிலில்...
அமர்த்தி தாலாட்டி, சென்ற காலம் அன்று......

நிற்கும் நிழல் மறைந்து நினைவுகள்
சுருங்கி கருகிப் போன விதையை
பூக்கச் செய்தது விஞ்ஞானம் இன்று......

எறும்பு என வரிசையில் தொத்திசென்ற
நினைவுகள் எண்னும் சில்லரைக் குழந்தைகள்
தந்து பள்ளிச்சீட்டு பெறுவதைப்போல் …..
துள்ளி விளையாடிய பயணச்சீட்டுகள் இன்று
கொஞ்சிட ஆளில்லாமல் கதறித்திரிகிறது…..
கட்டண உயர்வினால் நாம் நடை
பயணிகளாகிறோம் மீண்டும்……
சோளமும் கம்பும் தானியமாய்
விளைந்து மூட்டைகட்டிய உழவன்
இன்று காணி நிலமின்றி விதைக்க
விதையின்றி, அறுவடை செய்ய நீர் பாசனமின்றி
விழி பிதுங்கிப் போய் நிற்கிறான்

அள்ளிச் செருக சில்லரையில்லை
கட்டிவைக்க பணமில்லை
மின்னியணிய பொன்னில்லை
துள்ளியழும் பிள்ளைக்கு புகட்ட
பாலில்லை…
உயர்ந்தது கட்டணங்கள்
உயரவில்லை எம் சம்பளங்கள்
சொல்லியழ ஆளில்லை…..
சோகம் நிறைந்த விலையுயர்வை


நான் கருப்பு வண்ணம் பேசுகிறேன்
எனைவெறுக்கும் இதயங்களே
ஒரு முறையாவது என்னைப் புரிந்து
கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
பொன்னொளி பூக்கும் பொன்னிற வேளையில்
நங்கையரின் அணிகலன்கலென மின்னும்
வைரமும் பூமியதனில் புதைந்து கிடக்கும்
நேரம் கருமை வண்ணம்தான்!
ஏ நிலவே! உனை இந்த உலகிற்கு
அழகாய் காட்டிடத் தானே
இரவு எனும் கரும் ஓவியத்தை
இறைவன் வானில் வரைந்தான்.
மழைமேகமென உருண்டு திரண்ட
மேகங்களை மங்கையரின் அழகிய
கூந்தலுக்கு உதாரணமென கவிகள்
பாடிட காரணம் கருமையே?!
வாடகையாய் பெற்ற உடலில்
உயிர் கூட்டைப் பிழிந்து  குருதியாய்
நிரம்பிய துளியை பிள்ளையாய்ச்
சுமக்கும் கருவறையும் கருமையே?
விடிவெள்ளியை உலகிற்கு பெற்றெடுக்கும்
அன்னையும் கருமைதான்!
காதலாகி கசிந்துருகி உலகின் எல்லா
வண்ணங்களையும் நோக்கிட உதவும்
கண்ணின் கருவிழி கருமைதான் !
தேகமே நீ மட்டும் கருமையெனில் !
உமை மட்டும் ஒதுக்கும் மனித இனமே !
அம்மையே அபிராமியே என்று நீ
வேண்டும் அந்த அபிராமியும்
கருமைதான் !
அவளை வடித்தெடுத்த  அந்தச்
சிலையும் கருமைதான் !
வெண் கருமை மேகம் பிரசவிக்கும்
சூரியக் குழந்தையின காவிரித்தாயே
உன் கரிசல் மண் கருமைதான் !
நான் துறக்கும் உயிரை இழந்த
மெய் இன்று புதையப்போகும் நிலமே
நீயும் கருமைதான் !
மீண்டும் வருவேன்
மீண்டு வருவேன் !
கருமையென் புகழ் பாடிட ?!


னிக்குடம் தழும்பி தவிக்கின்ற தாயின்
நிறைகுடம் கிழித்து ரத்தச் சேற்றில் குளித்தபடி,
அழகான பூமியின் குளிரையும் வெயிலையும்
அனுபவிக்க அழவும் சிரிக்கவும் கற்றுக்  கொண்டு
வெளியேறி ? செந்நிற வாய்திறந்து !
சூடான மார்புத் தட்டையின் பாலைச் சுவைத்து
பரிமாறி பஞ்சு மெத்தையில் படுத்துறங்கி
தவழ்ந்து விளையாடிட முழங்கால் முற்றிலும்
அச்சாய் தழும்புகள்!
பொம்மைச் சகாக்கள் அணிவகுக்க
பொய்க்கால் குதிரையில் பூவுலகம் சுற்றி ?
தாய்மடிச் சுகம்தனில் அமிழ்ந்திட்டேன்.
தோழமையின் தோளில் அமர்ந்து பரவி
விரிந்த பூவுலகில் பருவ வயதில்
பொங்கி எழுந்த திமிரை பூத்துக் குலுங்கிய
எழிலை காளையரின் பார்வைகள் குறுகுறுக்க,
தாவியணைத்தேன் தாவணியை?!
மூழ்கிக்கிடந்த உடைகளின் அடியில் உள்
மனம் விழித்துக் கொண்டு காதலுக்கென விழைந்தது,
தேடினேன் நானும்  தேவனும் வந்தான்
தேன்சுளையென எனைச் சுவைத்தான்.
மயங்கினேன் அவன் மடியில் அள்ளியணைத்து
அதரமும் சுவைத்து காதல் குழைத்து
வரைந்தான் அவன் உருவம்தனை
என் வெற்றுடலில் ?!
காவியம் என நான் காத்திருக்க காதலன்
காணாமல் விடை கொடுக்க காலமகள்
எடுத்துரைத்தாள் என் காதலின் சான்றினை?!
காயாகி கனியாகி பூவாகி மலர்ந்து
மணம்பரப்பி நானே இன்று ஒரு அரக்கனைச்
சுமக்கிறேன்.
அரசனைப் படித்த நான் அரக்கனைப்
படிக்க தவறிவிட்டேன். இன்று உடற் கூட்டை
விட்டகன்று வெண்ணிற வானில் மேகமாய்
கலந்தேன்!
வானக்கூரையின் கீழ் உலகம்
எத்தனை காதல்களை சுமந்தபடி?
இழந்து போன என் காதலின்
சுவடுகளை நதிநரில் தேடியபடியே?
பிறக்கும் போதும் இறக்கும் போதும்
அழுகை ஒன்றே துணையாய்?!
Powered By Blogger
Powered by Blogger.