30 December 2011

சுவரொட்டி



நான் சாலையோர சுவர் பேசுகிறேன்
இரவானாலும் , பகலானாலும் சரி
எனக்கு ஓய்வோ உறக்கமோ கிடையாது,

ஒவ்வொரு மனிதனின்
அழுக்கு கூறும் முதுகைப்போல்!
அதே சாலை என்னும் ஜீவனின்
முதுகாய் வாழும் என்னிடம்
எல்லா அழுக்குகளும் மண்டிக்கிடக்கிறது!

நித்தம் செடி பிரசவிக்கும் மலர்களில்
சில பகவானுக்கும், பாதைகளுக்கும் போகும்.
ஆனால், நானோ என்னுள்ளே
கடவுளையும், காமத்தையும் புதைக்கிறேன்.
சுவரொட்டியெனும் பெயரில் !

பகலில் ஒட்டிய ஆடையை
இரவில் நிர்வாணமாக்கி யாரோ
அவன் கோந்தென்னும் பெயரில்
என் உடலைத் தடவுகிறான் !
வேசியாய் நான் உணருகிறேன் !
அத்தருணத்தில் நான்!

மெழுகி பூசி ! ஆடையென நீலவண்ண
ஆடையென சுவரொட்டியை அணிவித்து,
அலங்காரம் செய்கிறான்!

பகல் விழிக்கும் நேரம்
மணப்பெண்ணாய் புது ஆடையோடு
நிற்கிறேன் நான்!

சிலர் ரசிப்பார் சிலர் ருசிப்பார்
குறுகுறுவென்று பார்த்திட்டு,
சுகமாய்ச் சாய்ந்து கொள்வார்கள்
என் மடியில் !

இதோ குளிர் நீர் அடித்து
கோலமிடுவதைப் போல்
வண்ணம் தீட்டுகிறான்.
புதிய வர்ணத்தின் வாசனை!
வண்ணங்கள் வாரித் தெரித்த
பூக்களாகிறேன்!

இன்றே அணிகிறேன்
நாளை அவிழ்க்க?!

என்னை விரும்புவோரும் உண்டு
வெறுப்போரும் உண்டு என்-
அழகிய முகத்தினை ஆசையாய்
வருடவும் செய்வர் !
நாட்கணக்கில் சிறுவரென அதில்
ஏறி சவாரியும் செய்வர் !

அம்மன் படமெனில்
கையெடுத்துக் கும்பிட்டும்
ஆசைப்படமெனில் அருகில் வந்து
வருடியும் பலரென்னை மதிப்பர். !

என் உடல் சில நேரங்களில்
வதையும் படும்!
பிடிக்காத அலைகளை
சுமக்கின்ற கடலைப் போல
ஒவ்வாத எத்தனையோ
காகிதங்களைச் சுமந்திருக்கிறேன்!
வேலை காலியில்லை என்னும்-
வாசகம் சுமந்த பொதி
கழுதையாய் போனேன்!

அடிமுட்டாளாம் அவனின்
இயற்கை ஓட்டம் தணிக்கும்
கழிப்பிடமாய் ஆனேன்! 
எச்சில்களை சுமந்த குப்பைத்தொட்டியானேன்?!

இறைவா என்ன தவறு இழைத்தேன்
என்று எனக்கிந்த தண்டனை

ஏ! பொது நல அமைப்புகளே?
சித்திரங்களுக்கு குரல் தரும்
நீங்கள்
சுவர்களுக்கும் குரல் தாருங்கள்.?!

0 comments:

Powered By Blogger
Powered by Blogger.