நான் கருப்பு வண்ணம் பேசுகிறேன்
எனைவெறுக்கும் இதயங்களே
ஒரு முறையாவது என்னைப் புரிந்து
கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
பொன்னொளி பூக்கும் பொன்னிற வேளையில்
நங்கையரின் அணிகலன்கலென மின்னும்
வைரமும் பூமியதனில் புதைந்து கிடக்கும்
நேரம் கருமை வண்ணம்தான்!
ஏ நிலவே! உனை இந்த உலகிற்கு
அழகாய் காட்டிடத் தானே
இரவு எனும் கரும் ஓவியத்தை
இறைவன் வானில் வரைந்தான்.
மழைமேகமென உருண்டு திரண்ட
மேகங்களை மங்கையரின் அழகிய
கூந்தலுக்கு உதாரணமென கவிகள்
பாடிட காரணம் கருமையே?!
வாடகையாய் பெற்ற உடலில்
உயிர் கூட்டைப் பிழிந்து குருதியாய்
நிரம்பிய துளியை பிள்ளையாய்ச்
சுமக்கும் கருவறையும் கருமையே?
விடிவெள்ளியை உலகிற்கு பெற்றெடுக்கும்
அன்னையும் கருமைதான்!
காதலாகி கசிந்துருகி உலகின் எல்லா
வண்ணங்களையும் நோக்கிட உதவும்
கண்ணின் கருவிழி கருமைதான் !
தேகமே நீ மட்டும் கருமையெனில் !
உமை மட்டும் ஒதுக்கும் மனித இனமே !
அம்மையே அபிராமியே என்று நீ
வேண்டும் அந்த அபிராமியும்
கருமைதான் !
அவளை வடித்தெடுத்த அந்தச்
சிலையும் கருமைதான் !
வெண் கருமை மேகம் பிரசவிக்கும்
சூரியக் குழந்தையின காவிரித்தாயே
உன் கரிசல் மண் கருமைதான் !
நான் துறக்கும் உயிரை இழந்த
மெய் இன்று புதையப்போகும் நிலமே
நீயும் கருமைதான் !
மீண்டும் வருவேன்
மீண்டு வருவேன் !
கருமையென் புகழ் பாடிட ?!


0 comments:
Post a Comment